பள்ளி புத்தகங்களில்.. கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க நடவடிக்கை.. திண்டுக்கல் ஐ லியோனி
சென்னை: பள்ளி புத்தகங்களை மாணவர்கள் மகிழ்ச்சியாகப் படிக்கும் வகையில் மாற்றுவதே தனது நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத் தலைவராகத் திண்டுக்கல் லியோனி, பாடப்புத்தகங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றைச் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
Recommended Video
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பட்டிமன்ற நடுவர், பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பிரசாரத்தின் சமயத்தில் பெண்கள் குறித்து அவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் லியோனி
இந்நிலையில், தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராகத் திண்டுக்கல் லியோனி கடந்த சில நாட்களுக்கு முன் நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனம் குறித்து திண்டுக்கல் லியோனி அவரது ட்விட்டரில், "தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் தலைவராக முதல்வர் என்னை பணியில் அமர்த்திப் பெருமைப்படுத்தினார். 30ஆண்டுகள் ஆசிரியப்பணியில் இருந்த எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை பெருமையாக நான் கருதுகிறேன்" எனப் பதிவிட்டிருந்தார்.

பதவியேற்றுக் கொண்டார்
இந்தச் சூழலில் இன்று டி.பி.ஐ வளாகத்தில் பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக லியோனி இன்று பதவியேற்றுக் கொண்டார். அப்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் லியோனியை வரவேற்ற அன்பில் மகேஷ், அவரது இருக்கையில் அமர வைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

விருப்பத்துடன் படிக்கும் வகையில்
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 2011ஆண் ஆண்டு ஆசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். அப்போது கீழே வைத்த பாடப் புத்தகத்தை இப்போது சுமார் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் கையில் எடுத்துள்ளேன். பள்ளி புத்தகங்கள் என்றால் மாணவர்கள் கஷ்டப்பட்டுப் படிக்கிறார்கள். இந்த நிலையை மாற்றி மாணவர்கள் விருப்பத்துடன் மகிழ்ச்சியாகப் படிக்கும் வகையில் பாடப் புத்தகங்களை மாற்றுவதே எனது நோக்கம்.

கருணாநிதி வாழ்க்கை வரலாறு
"நாங்கள் மாணவர்களாக இருந்த சமயத்தில் அண்ணாவின் பேச்சுக்கள் எல்லாம் எங்கள் பாடத்திட்டத்தில் இருந்தது.. கடந்த ஆட்சியில் பாடநூல் புத்தகங்களின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர்கூட நீக்கப்பட்டது. அது முழுக்க முழுக்க அரசியலுக்காகச் செய்யப்பட்டது. ஆனால் இப்போது ஒன்றாம் வகுப்பு முதல் +2 வரையிலான பாடத்திட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றைச் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும்" என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications