என்னப்பா போலாமா.. கொடைக்கானலில் தொடங்கியது 63வது மலர்க்கண்காட்சி! அசந்த சுற்றுலாப் பயணிகள்!
திண்டுக்கல்: தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 63-வது மலர்க்கண்காட்சி இன்று தொடங்கியது. கண்ணைக் கவரும் வகையில் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பல்வேறு படைப்புகளை உற்சாகத்துடன் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
"மலைகளின் இளவரசி" என அழைக்கப்படும் கொடைக்கானல் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த சுற்றுலா மலை வாசஸ்தலமாக விளங்குகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கோடைகாலத்தில் அதிக அளவில் கொடைக்கானலுக்கு வருகை தந்து சுற்றுலா இடங்களை கண்டுகளிக்கின்றனர்.

கோடைகாலத்தில் வருகை தரும் ஏராளமான சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், தமிழ்நாட்டின் பல்வேறு கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சி மற்றும் கோடைவிழா தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

கோடை விழா 2026
அந்த வகையில், இந்த ஆண்டு கோடைவிழா-2026-ஐ முன்னிட்டு 63-வது மலர்கண்காட்சியானது இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியானது இன்று (20.05.2026) முதல் வருகின்ற 31.05.2026 வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மலர்க்கண்காட்சியில் சுமார் 6 இலட்சம் மலர் நாற்றுகளால் ஆன மலர்ப்படுக்கைகளும் பல்வேறு வகையான வண்ண மலர்களை கொண்ட 10,000 எண்கள் மலர் தொட்டிகளும் மற்றும் 1,30,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மலர்களால் ஆன அமைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கொடைக்கானல் மலர்க்கண்காட்சி
மேலும், 63-வது மலர்க்கண்காட்சியின் சிறப்பம்சமாக தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் இயற்கை அழகை வெளிப்படுத்தும் வகையில் பாம்பன் பாலம், ஜல்லிக்கட்டு, பிரகதீஸ்வரர் கோவில், பெண்களின் மேன்மையை உணர்த்தும் பெண்உருவ அமைப்பு உள்ளிட்ட மலர் உருவ அமைப்புகளும், திண்டுக்கல் மாவட்டத்தின் சிறப்புகளான தேவாங்கு, சின்னாளப்பட்டி சுங்குடி சேலை, நிலக்கோட்டை மல்லிகைப் பூ, திண்டுக்கல் பிரியாணி உள்ளிட்ட உருவ அமைப்புகள் காய்கறிகளாலும் மற்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகளைக் கவரும் விதமாக பட்டாம்பூச்சி நுழைவுவாயில் நருட்டோ, இரட்டை ஹார்ட்டின் போன்ற சிறப்பு மலர் உருவ அமைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவில்
தொடர்ந்து, 63-வது மலர்க்கண்காட்சியில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வரும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் (தஞ்சை பெரிய கோவில்) சிறப்பம்சங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு எடுத்துரைக்கும் நோக்கில் மாதிரி தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் வரலாற்றுச் சிறப்பிற்கு இக்கோயில் மிகச்சிறந்த சான்றாகும்.

நந்தி சிலை
இக்கோயிலில் அமைந்துள்ள கோபுரமானது உலகின் மிக உயரமான கோபுரங்களில் ஒன்றாகும். இக்கோவிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ஒரே கல்லால் செதுக்கப்பட்ட நந்தி சிலை அமைந்துள்ளது. இது இந்தியாவின் இரண்டாவது பெரிய நந்தியாகும். இக்கோயிலானது சிமெண்ட் அல்லது பசைகள் பயன்படுத்தப்படாமல் முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்டது.

ஜல்லிக்கட்டு
மேலும், தமிழர்களின் வீர விளைாயட்டுகளில் ஒன்றாக கொண்டாடப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியினை நினைவுகூரும் வகையில், பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாதிரி காளைமாடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஏறுதழுவுதல் விளையாட்டு என்ற மற்றொரு பெயரும் உண்டு. ஜல்லிக்கட்டு விளையாட்டு வீரர்களின் வீரத்தினை வெளிக்கொணரும் வகையில் வீரர் ஒருவர் காளைமாட்டினை அடக்குவது போன்ற மாதிரியில் இந்த காளைமாடானது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள்
சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதியும், அவர்களின் வசதிக்காகவும் கொடைக்கானல் நகராட்சியின் சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. எனவே, சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண். (18004250150)-க்கு தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

திறனாளிகளுக்கு இலவசம்
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் உடன் வருபவர்களுக்கும் 63-வது மலர்க்காட்சியினை கட்டணமின்றி கண்டுக்களித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறை
தொடர்ந்து, 63-வது மலர்க்காட்சிக்கு வருகைபுரியும் சுற்றுலாப்பயணிகளுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வாகன நிறுத்துமிடம், போக்குவரத்து வசதிகள், வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 24 மணிநேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications