போக்குவரத்து துறையில் இருந்து பறந்த உத்தரவு.. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஹேப்பி.. ஆனால் ஒரு ட்விஸ்ட்
சென்னை: வெளிமாநில பதிவு எண் கொண்ட அனைத்து ஆம்னி பேருந்துகளையும், 2 மாதங்களில் தமிழ்நாடு பதிவு வாகனங்களாக மாற்ற வேண்டும் என்று போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார். விதிமுறைகளை மீறியதற்காக பிடிக்கப்பட்ட 120 ஆம்னி பேருந்துகளில் வரி கட்டிய பேருந்துகளையும் மட்டும் நாளை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் இயங்கும் ஆம்னி பேருந்துகள் வழக்கமான நாட்களை விட விடுமுறை நாட்களில் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இந்நிலையில் ஆயுத பூஜையை ஒட்டி சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.
கடந்த வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் ஆம்னி பேருந்துகள் மிக அதிக கட்டணங்களை வசூலித்தன. வழக்கத்தை விட இரண்டு மடங்கு வரை கட்டணம் வசூலித்தன. மிக அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகாரில் 120 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் சிறை பிடித்தனர். அதோடு 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதமும் விதித்தனர்.
இதையடுத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதன் பின்னர் போக்குவரத்து துறை இணை செயலாளர் முத்துவை தென்னிந்திய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பினர் சந்தித்தனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது. ஆம்னி பேருந்துகள் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சிறைபிடிக்கப்பட்டுள்ள பேருந்துகளில் ஆவணங்கள் சரியாக இருந்தால் நாளை (இன்று) விடுவிக்கப்படும் என்று அரசு தரப்பு அறிவித்தது. மேலும் தவறுதலாக பேருந்துகளை சிறைபிடிக்கக்கூடாது என்ற கோரிக்கையும் அரசு தரப்பில் ஏற்கப்பட்டது. மேலும் விதிமீறல் இருந்தாலும் நடுவழியில் பேருந்துகளை சிறைபிடிக்கக்கூடாது என்ற கோரிக்கையும் அரசு ஏற்றுக்கொண்டது. ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் இந்த மூன்று கோரிக்கையையும் ஏற்றுக் கொண்டதால் அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதனிடையே சிறைபிடிக்கப்பட்ட 120 ஆம்னி பேருந்துகளில் வரி கட்டிய பேருந்துகளை மட்டும் நாளை விடுவிக்க போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார். அதே நேரம் வெளிமாநில பதிவு எண் கொண்ட அனைத்து ஆம்னி பேருந்துகளையும், 2 மாதங்களில் தமிழ்நாடு பதிவு வாகனங்களாக மாற்ற வேண்டும் என்று போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, பேருந்துகளை விடுவிக்க போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்ததற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுவாக வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் அடிக்கடி சோதனை செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டிற்குள் மட்டும் ஓடும் வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை, தமிழ்நாட்டு பதிவு எண்ணிற்கு மாற்ற வேண்டும் என்று அரசு நீண்ட காலமாக உத்தரவிட்டு வருகிறது. அந்த உத்தரவை தான் இரண்டு மாதத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நிறைவேற்ற வேண்டும் எனறு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications