104 டிகிரி! வேலூரை வாட்டும் வெயில்.. திணறும் திருச்சி, திருத்தணி - ஊட்டி, கொடைக்கானல் நிலை தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வேலூர் மற்றும் திருச்சியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் சுட்டெரித்தது.
தமிழ்நாட்டில் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதத்தின் நடுப்பகுதி வரை கோடை வெப்பம் வாட்டி வதைப்பது இயல்பு.
குறிப்பாக மே மாதம் சூரியன் அதிகபட்ச சூட்டை இந்திய துணை கண்டத்தின் மீது இறக்கிவிடும். இதற்காகவே பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறைகள் அறிவிக்கப்படுன்றன.

வெயிலும் மழையும்
அந்த வகையில் மே மாதம் தொடங்குவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. ஆனால், ஏப்ரல் மாதத்தில் இருந்தே பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. மார்ச் மாதத்தின் பிற்பகுதி மற்றும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதிகளில் தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் ஓரளவு நல்ல மழை பெய்தது.

குளிர்ச்சியை விரட்டிய வெப்பம்
சில நாட்களுக்கு முன்புகூட தஞ்சை டெல்டா மாவட்டங்களில் மழை பெய்தது. ஆனால், அந்த மழையால் ஏற்பட்ட குளிர்ச்சி அடுத்த ஒரு நாளுக்கு கூட தாக்குப்பிடிக்கவில்லை. அந்த அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள் என்று எச்சரிக்கும் அளவுக்கு பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது.

வேலூர், திருச்சியில் உச்சபச்சம்
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வழக்கம்போலவே அதிகபட்சமாக வட மாவட்டமான வேலூரில் 40.3 டிகிரி செல்சியஸ், அதாவது 104.54 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. மத்திய மாவட்டமான திருச்சியில் சற்று குறைவாக 104.18 டிகிரி வெயில் வாட்டி வதைத்து இருக்கிறது.

100-ஐ தாண்டிய மாவட்டங்கள்
அடுத்ததாக கரூர் பரமத்தியில் 103.1 டிகிரி வெப்பமும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 102.74 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது. மேற்கு மாவட்டமான ஈரோடு மற்றும் தென் மாவட்டமான மதுரையில் 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிலும் சூரியன் சுட்டெரித்து இருக்கிறது.

தலைநகர் சென்னை
சென்னையை பொருத்தவரை மீனம்பாக்கத்தில் 99.68 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 96.62 ஃபாரன்ஹீட் அளவிலும் வெப்பம் வதைத்து இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் மொத்தம் 7 மாவட்டங்களில் 100 டிகிருக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தனியார் வானிலை இணையதளமான ACCUWEATHER வெளியிட்டுள்ள கணிப்பின்படி வேலூர் மற்றும் மதுரையில் 116 டிகிரி வெயில் சுட்டெரித்ததாக தெரிவித்து இருக்கிறது.

கூலாக இருக்கும் பகுதிகள்
தமிழ்நாட்டின் குளிர் பிரதேசங்களான ஊட்டியில் 78.9 ஃபாரன்ஹீட் வெப்பமும், வால்பாறையில் 81.5 ஃபாரன்ஹீட் வெப்பமும், கொடைக்கானலில் 68.54 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது. எனவே பள்ளிகளுக்கு விடுமுறை விட்டவுடன் ஊட்டி, கொடைக்கானல் என குளிர் பிரதேசங்களுக்கு சென்று வெயிலுக்கு விடுமுறை அளிக்க மக்கள் திட்டமிட்டு இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications