மத்திய அரசுக்கு எதிராக 11 நாட்கள் பிரச்சாரம்... காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம்
சென்னை: மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சிறப்பு செயற்குழு கூட்டத்தில் இன்று விவாதிக்கப்பட்டது.
அதில் நவம்பர் 5-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தலை ஏற்று மாவட்டம் தோறும் வட்டார, நகர, பேரூர் அளவில் பிரச்சாரம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது.
மேலும், உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிறப்பு செயற்குழு
பொருளாதார மந்தநிலை குறித்து நவம்பர் 5 முதல் 15 ஆம் தேதி வரை தமிழகத்தில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்கள் குறித்து ஆலோசனை செய்வதற்கான சிறப்பு செயற்க்குழு கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

நிர்வாகிகள்
இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர் பேராசிரியர் கே.வி. தாமஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் டாக்டர் சிரிவல்ல பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், முன்னாள், இன்னாள், மக்களவை உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

விமர்சனம்
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி ஏற்றம், பணப் பற்றாக்குறை, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவதாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மத்திய அரசு மக்களை சீரழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருப்பதாக விமர்சிக்கப்பட்டது.

கால தாமதம்
கடந்த மூன்றாண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் பல்வேறு காரணங்களைக் கூறி அ.தி.மு.க. அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும், இதுவரை உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகளின் பதவி 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் கே.எஸ்.அழகிரி. உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாத இறுதியில் நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications