இடைத்தேர்தல் பணிக்குழுவை அறிவித்தது காங்கிரஸ்... யாருக்கு என்ன பொறுப்பு?
சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பணி பொறுப்புக்குழு தலைவராக வசந்த்குமார் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், தேர்தல் பணிக்குழு செயலாளராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனும், ஒருங்கிணைப்பாளராக மயூரா ஜெயகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி தொகுதி தேர்தல் பணி சிறப்பு பார்வையாளராக கே.ஆர்.ராமசாமி, திருநாவுக்கரசர் எம்.பி., ஜோதிமணி எம்.பி., கார்த்தி சிதம்பரம் எம்.பி.ஆகியோரை அறிவித்துள்ளார் அழகிரி. இதேபோல் மேற்பார்வையாளர்களாக குமரி அனந்தன், சுதர்சன நாச்சியபன், ஊர்வசி அமிர்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பணி பொறுப்புக்குழு தலைவராக விஷ்ணுபிரசாத் எம்.பி.யும், தொகுதி மேற்பார்வையாளர்களாக தங்கபாலு, யசோதா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தித்திருக்கிறார். பொறுப்புக்குழு உறுப்பினர்களாக வாழப்பாடி ராம.சுகந்தன், பலராமன், குலாம் மொய்தீன் உள்ளிட்டோரை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே இரண்டு தொகுதிகளுக்கும் திமுக பொறுப்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியும் இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அறிவித்துள்ளது.