பொருளாதார தேக்க நிலை... மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் கண்டனம்
சென்னை: பொருளாதார தேக்க நிலையை சரிசெய்ய மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தனது கடும் கண்டனத்தை மத்திய அரசுக்கு பதிவு செய்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

1.1 % குறைவு
இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துக் கொண்டிருப்பதால் மிகப் பெரிய அளவில் மக்களை பாதித்து வருகிறது. தொழில் வளர்ச்சி கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி 1.1 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஏழு ஆண்டுகளில் மிகக் குறைவான அளவாகும்.

கண்டனம்
செப்டம்பர் மாதத்தில் தொழில் துறை உற்பத்தி 8 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவை சந்தித்துள்ளது. இத்தகைய பொருளாதாரப் பின்னடைவு காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

நிலையான ஆட்சி
இந்தியாவின் பொருளாதார தலைநகரமாக கருதப்படுகிற மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வின் ஆட்சி அகற்றப்பட்டது மதச்சார்பற்ற சக்திகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைந்திட அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரசும் மேற்கொண்டு வருகின்றன.

நாட்டை மீட்க
மத்திய பா.ஜ.க. அரசு பொருளாதார வல்லுநர்களோடு கலந்து பேசி பொருளாதார தேக்க நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.












Click it and Unblock the Notifications