முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறது பாஜக! மக்கள் பாடம் புகட்டுவார்கள்! காங்கிரஸ் சாடல்!
சென்னை: உத்தரப்பிரதேசம் உட்பட 5 மாநில மக்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டுவார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சாடியுள்ளார்.
இந்தியாவில் பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

வறுமைக்கோடு
இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மைய கணக்கீட்டின்படி 2.1 கோடி மாதச் சம்பளம் வாங்கும் அமைப்பு சார்ந்த பணியாளர்கள் வேலையிழந்துள்ளனர். அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழக ஆய்வின்படி கிராமப்புறத்தில் 57 சதவிகிதம், நகர்ப்புறத்தில் 87 சதவிகித தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 32 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது பா.ஜ.க. ஆட்சியில் 23 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே சென்றுள்ளனர்.

வறுமையில் வாடி
இதன்படி இந்திய மக்கள் தொகையில் 7 பேரில் ஒருவரும், உலக மக்கள் தொகையில் மூன்று சதவிகிதமும் இந்தியாவில் வறுமையில் இருப்பதாக வலுவான புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மேலும் 13 கோடி இந்தியர்களின் குறைந்தபட்ச வருமானம் ஒருநாளைக்கு ரூபாய் 150-க்கும் கீழே சென்றுள்ளது. வரலாறு காணாத வகையில் பொருளாதாரப் பேரழிவை மக்கள் சந்தித்து வருகிறார்கள்.

முழுப் பூசனிக்காய்
முழுப் பூசனிக்காயைச் சோற்றில் மறைப்பது போல, நாட்டு மக்களிடையே இருக்கிற வேலையில்லா திண்டாட்டம், வேலை வாய்ப்பிழப்பு, உற்பத்திக் குறைவு, வளர்ச்சியில் பின்னடைவு ஆகியவற்றை மூடிமறைத்து விட்டு மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. இந்திய மக்கள் பசி, பட்டினியில் மடிந்து கொண்டிருக்கிற அதேநேரத்தில் பிரதமர் மோடியின் நண்பர்களான அம்பானி, அதானி சொத்துகள் பலமடங்கு கூடியிருக்கிறது

மறுக்க முடியுமா ?
1980 இல் சாதாரண வர்த்தகராக இருந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அதானி 2003 இல் மோடியின் நட்பு ஏற்பட்டு ஆசியாவின் இரண்டாவது கோடீசுவரராக அம்பானியின் அடுத்த நிலைக்கு உயர்ந்துள்ளார். இவை அனைத்துமே பிரதமர் மோடியின் ஆசியோடும், ஆதரவோடும் நடைபெற்றதாகும். பிரதமர் மோடி ஆட்சியில் ஊழலே இல்லை என்று கூறுபவர்கள், அதானியின் பொருளாதார வளர்ச்சிக்குப் பின்னாலே பா.ஜ.க. அரசின் ஆதரவும், ஒத்துழைப்பும் இல்லை என்று எவராவது மறுக்க முடியுமா ?

பாடம் புகட்டுவார்கள்
எனவே, இந்தியாவை வல்லரசாக்குவேன், விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காகக் கூட்டுவேன், ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடியின் இந்தியாவில் பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருவதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை. இத்தகைய மோடியின் ஆட்சிமுறைக்கு உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் உரியப் பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.












Click it and Unblock the Notifications