கிறிஸ்துவ சமுதாயத்தினரின் நற்பணிகள் ஏராளம்! தமிழக காங்கிரஸ் ஈஸ்டர் திருநாள் வாழ்த்து!
சென்னை: மக்கள் மீது அன்பும், பரிவும் காட்டுவதில் கிறிஸ்துவ சமுதாயம் அளப்பரிய பங்காற்றி வருவதாக பாராட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக் கூறியுள்ளது.
இயேசு பிரான் போதித்த அன்பை மாறாமல் பின்பற்றுகிற கிறிஸ்துவ சகோதரர்களை மனம் திறந்து பாராட்ட விரும்புவதாகவும் தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
குஜராத்துக்கு குறி வைக்கும் காங்கிரஸ்? சோனியாவை சந்தித்த பிரசாந்த் கிஷோர் - கட்சியில் இணைய திட்டம்
ஈஸ்டர் திருநாள்
சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை தழுவிய ஏசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த நிகழ்வினையொட்டி, நோன்பிருந்து கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் திருநாள். ஈஸ்டர் திருநாளில் விரதமிருக்கும் கிறிஸ்துவ சமுதாயத்து மக்கள் இந்நாளில் செலவழிக்காமல் இருந்த பணத்தை ஏழை எளியோருக்கு அன்பளிப்பாக அளிக்கின்றனர்.
சிறந்த நற்பணிகள்
இதனால், அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியோடு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட முடிகிறது. கிறிஸ்துவ சமுதாயமே மக்கள் மீது அன்பும், பரிவும் காட்டுவதில் அளப்பரிய பங்காற்றி வருகிறது. முதியோர் இல்லங்கள், ஏழை, எளியவர்களுக்கு இலவச கல்வி, மருத்துவ உதவிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு புகலிடம் வழங்குவது ஆகியவை இச்சமுதாயத்தின் மிகச் சிறந்த நற்பணிகளாக விளங்கி வருகின்றன.
நல் வாழ்த்துகள்
இயேசு பிரான் போதித்த அன்பை மாறாமல் பின்பற்றுகிற கிறிஸ்துவ சகோதரர்களை மனம் திறந்து பாராட்ட விரும்புகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாம் நாள்
இயேசு கிறிஸ்து மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினமே ஈஸ்டர் நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருநாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ மக்கள் கொணாடி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடத்தி அதில் பங்கேற்பார்கள்.