சில நாட்களில் பொது தேர்வு.. மின்வாரியம் அதிரடி உத்தரவு! தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம்
தமிழ்நாடு மின்வாரியம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
சென்னை: பொதுத் தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
கோடைக் காலம் வந்துவிட்டாலே மின்சார பயன்பாடு அதிகரித்துவிடும்.. கடும் வெயில் உள்ளிட்ட காரணங்களால், குளிர்சாதன வசதிகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலத்தில் மின்சார பயன்பாடு கணிசமாக அதிகரிக்கும். இதன் காரணமாக சில இடங்களில் மின் தடை ஏற்படும் வாய்ப்புகளும் ஏற்படும்.@

பொதுத்தேர்வு
இதே மார்ச் ஏப்ரல் காலகட்டத்தில் தான் பொதுத்தேர்வுகளும் நடைபெறும். அதன்படி தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அட்டவணையை மின்வாரியம் கடந்த நவ. மாதமே அறிவித்துவிட்டது.

அட்டவணை
அதேபோல, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வரும் மார்ச் 14-ஆம் தேதி தொடங்குகிறது. +1 மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. +1,+2 மாணவர்களுக்குத் தேர்வு முடிந்த பிறகு, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு தொடங்குகிறது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

மின்வாரியம்
பொதுத்தேர்வு தொடங்க சில நாட்கள் இருக்கும் நிலையில், மாணவர்கள் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். இதற்கான வழிகாட்டுதல்களையும் தமிழ்நாடு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில் தேர்வு எழுத வரும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டிருந்தது. இதனிடையே பொதுத்தேர்வு குறித்தும் தேர்வு மையம் குறித்தும் மின்வாரியம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

தடையில்லா மின்சாரம்
அதன்படி, பொதுத் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தேர்வு எழுதும் சமயத்தில் மின்தடை ஏற்படுவதைத் தவிர்க்க தேவையான முன்னேற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளனர். மேலும், மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காகத் தேவையான ஊழியர்களைத் தயார் நிலையில் வைக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications