தமிழ்நாடு மின்துறை பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் - லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை
மின்வாரியத்தில் கேங்மேன் நியமனத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு புகார் குறித்து இன்று லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கியது
சென்னை: தமிழக மின்சார வாரியத்தில் கேங்மேன் வேலைக்கான நியமனத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு புகார் குறித்து இன்று லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கியது.
மின்சார வாரியத்தில் கேங்மென் நியமனத்தில் முறைகேடு புகார் பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடல் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்த பலரை லஞ்சம் வாங்கிக் கொண்டு நியமனம் செய்ததாக புகார் கூறப்படுகிறது. ஆகவே கேங்மேன் பணி நியமன முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுமாறு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
சார்பில் அதன் பொதுச்செயலாளர் ராஜா ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு நேரடி நியமனம் செய்யப்பட்டது.இதில் மின் கம்பங்களில் ஏறுதல், மின் பொருட்களை தூக்கிக்கொண்டு ஓடுவது போன்ற உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்த பலரை சில தொழிற்சங்கங்கள் பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கேங்மேன் பதவிக்கு இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 80 சதவீதம் பேர் தகுதியில்லாதவர்களாக உள்ளனர். எனவே, கேங்மேன் பணிக்காக ஆட்கள் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதால் தொடர்புடைய மின்துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டது. இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்மாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications