குரூப் 4 விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதா? என்ன நடந்தது? டிஎன்பிஎஸ்சி பரபரப்பு விளக்கம்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு டிஎன்பிஎஸ்சி மறுப்பு தெரிவித்துள்ளது. அட்டைப்பெட்டியில் விடைத்தாள் பிரிக்கப்பட்ட நிகழ்வு எங்கே நடந்தது என விசாரணை நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
குரூப் 4 தேர்வு அண்மையில் நடைபெற்று முடிந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் குரூப் 4 விடைத்தாள்கள் அடங்கிய அட்டைப் பெட்டிகள் பிரிக்கப்பட்டு, விடைத்தாள்கள் வெளியே எடுக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு
கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர்கள், உதவியாளர்கள், வனக் காவலர், வனக் காப்பாளர்கள் உள்ளிட்ட 3,935 காலிப் பணியிடங்கள் குரூப் 4 பிரிவில் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஏப்ரல் 25-இல் வெளியிட்டது.
விண்ணப்பிக்க மே 24-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. குரூப் 4 தேர்வுக்கு 13 லட்சத்து 89 ஆயிரத்து 743 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 5 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 13 லட்சத்து 69 ஆயிரத்து 738 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர்.
3 மாதங்களுக்குள் ரிசல்ட்
இவர்களில் 11 லட்சத்து 48 ஆயிரத்து 19 பேர் கடந்த ஜூலை 12 ஆம் தேதி அன்று குரூப் 2 தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் அடுத்த மூன்று மாதங்களில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கான உத்தேச விடைக்குறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஆட்சேபங்கள் இருந்தால் ஜூலை 28 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் பெட்டி பிரிக்கப்பட்டதா?
இதற்கிடையே சேலம் மாவட்டத்தில் இருந்து அனுப்பப்பட்ட விடைத்தாள் கட்டுகள் உரிய பாதுகாப்பில்லாமல், அட்டைப் பெட்டிகள் ஆங்காங்கே கிழிக்கப்பட்டும், முறையாக சீலிடப்படாமலும் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி, சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு டிஎன்பிஎஸ்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
தேர்வுகள் முடிந்ததும் விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு பெட்டியில் வைத்து சீல் வைக்கப்படும். சாதாரண அட்டைப் பெட்டிகளில் விடைத்தாள்கள் கொண்டுவரப்படாது. விடைத்தாள்கள் சீல் செய்யப்பட்ட டிரங்க் பெட்டியில் தலைமையகத்துக்கு பத்திரமாக கொண்டுவரப்பட்டது.
விடைத்தாள்கள் தவிர்த்து மற்ற ஆவணங்கள் மட்டுமே அட்டைப் பெட்டிகளில் வைத்து அனுப்பப்படும். சென்னைக்கு அனுப்பப்பட்ட சேதமடைந்த பெட்டிகளில், விடைத் தாள்கள் எதுவும் இல்லை. அட்டைப் பெட்டியில் விடைத்தாள் பிரிக்கப்பட்ட நிகழ்வு எங்கே நடந்தது என விசாரணை நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications