TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மாற்றம்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு குளறுபடிகள் காரணமாக அதிரடி
சென்னை: டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த சண்முகசுந்தரம் மாற்றப்பட்டுள்ளார். குளறுபடிகள் காரணமாக இன்று நடைபெற இருந்த குரூப் 2 , 2A முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த சண்முகசுந்தரம் மாற்றப்பட்டு வெங்கடபிரியா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. 'தொழில்நுட்ப கோளாறு' காரணமாக சென்னையில் 3 மையங்களில் தேர்வுகள் நடைபெறவில்லை எனவும், தேர்வர்கள் நலனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்று குரூப் 2 முதன்மைத் தேர்வு நடைபெற இருந்தது. உதவி ஆய்வாளர், உதவிப்பிரிவு அலுவலர் உட்படப் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருந்த 828 பணியிடங்களை நிரப்பு இந்தத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. காலையில் பாடத்தேர்வும், பிற்பகலில் தமிழ்த் தகுதி தாள் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் அரும்பாக்கம், நந்தனம் உள்ளிட்ட 7 மையங்களில் தேர்வுகள் நடக்கவிருந்தது.
சென்னை அரும்பாக்கத்தில் தேர்வு மையத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக இன்று தேர்வர்கள் குறித்த நேரத்தில் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து இன்று நடைபெறவிருந்த இரண்டு தேர்வுகளும் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு பின்னர் வேறு தேதியில் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது குறித்து தேர்வர்கள் அனைவருக்கும் மறுதேர்வு நடைபெறும் நாளுக்கு 15 தினங்களுக்கு முன்பாக தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-Mail) மூலம் தகவல் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், வரும் 22.02.2026 முற்பகல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-II பணிகள்) பொது அறிவுத் தேர்வு (தாள்-II) (Descriptive Type) அன்றைய தினமே நடத்தப்படும். இது தொடர்பாக தேர்வர்களுக்கு மீண்டும் சரிபார்த்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket) மீண்டும் 13.02.2026 அன்று வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
அரசின் நிர்வாக குளறுபடிகளே இந்த குழப்பத்திற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குரூப் 2 தேர்வில் குளறுபடி ஏற்பட்ட நிலையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக வெங்கடபிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெங்கடபிரியா தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராகப் பணியாற்றி வந்தார்.












Click it and Unblock the Notifications