TNPSC குரூப் 1 தேர்வு தொடங்கியது.. 90 காலி பணியிடங்களுக்கு 2.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்!
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 797 தேர்வு மையங்களில் தொடங்கி உள்ளது. 2.38 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கு இன்று குரூப் 1 முதல்நிலை தேர்வு நடத்தப்படுகிறது.

குரூப் 1 தேர்வு முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வு என நடைபெறும். இதில் முதல்நிலை தேர்வு இன்று காலை 9.30 மணி முதல் தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரையில் நடைபெற உள்ளது. இந்த முதல்நிலை தேர்வை 2.38 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதற்காக சென்னையில் மட்டும் 124 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 797 தேர்வு மையங்களில் இன்று தேர்வு நடைபெறுகிறது.
குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை ஆட்சியர் 16 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி)-23, வணிகவரித்துறை உதவி ஆணையர்-14, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 21, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்- 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 1 பணியிடம் என 90 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளியிட்டது.
தேர்வர்கள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 27 ஆம் தேதி இரவு 11.59 மணி வரையில் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான முதல் நிலை எழுத்து தேர்வு இன்று நடக்கிறது. இந்த தேர்வினை எழுதுவதற்கு 2 லட்சத்து 38 ஆயிரத்து 247 நபர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1,25,726 ஆண்களும், 1,12,501 பெண்களும், 20 மூன்றாம் பாலினத்தவரும் இன்று குரூப் 1 முதல்நிலை தேர்வை எழுதுகின்றனர். சென்னை மாவட்டத்தில் 124 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் 38 ஆயிரத்து 891 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு நடைபெறும் அனைத்து இடங்களிலும் தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் இடங்களில் தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குரூப் 1 முதல்நிலை தேர்வில் பொது அறிவில் 175 கேள்விகளும், மனத் திறனை சோதிக்கும் வகையில் 25 கேள்விகளும் என 200 கேள்விகள் இடம்பெறும். இதற்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications