குரூப் 2, 2 ஏ தேர்வு எழுதியிருக்கீங்களா? டிஎன்பிஎஸ்சியிடம் இருந்து வந்த ஹேப்பி நியூஸ்.. செம அறிவிப்பு
சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2 ஏ தேர்வுகளுக்கான காலிப்பணியிடங்கள் 6,033-ல் இருந்து 6,151 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சியால் நிரப்பப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் கால அட்டவணைப்படி அதன்படி தேர்வுகளை நடத்தி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கடந்த 2022ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணி குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர், முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற்றன.
தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மதியம் என இரு வேளைகளில் 186 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது. காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது. எனினும், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்களும் விமர்சனங்களை முன்வைத்தனர். குரூப் 2 தேர்வு காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
தேர்வு முடிவுகளை விரைந்து வழங்கவேண்டுமென்ற நோக்கத்துடன், தொகுதி-II முதன்மை எழுத்துத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்தவேண்டிய சூழ்நிலையாலும் மற்றும் சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு தற்போது கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், தொகுதி II தேர்வின் தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதியில் வெளியிடப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தொகுதி II தேர்வு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று டி.என்.பி.எஸ்.சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2 ஏ தேர்வுகளுக்கான காலிப்பணியிடங்கள் 6,033-ல் இருந்து 6,151 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வரும் 12 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், காலிப்பணியிடங்கள் அதிகரித்து இருப்பது தேர்வர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications