சென்னை ஏர்போர்ட், ஐடி, எக்ஸ்பிரஸ்வே, கடன், நடிகர் மோகம்.. தமிழ்நாடு பற்றி நெட்டிசனின் கசப்பான பதிவு
சென்னை: தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகம் தொடர்பான முக்கியமான கேள்விகளை சுபாஷ் ராமசுப்ரமணியம் என்பவர் எழுப்பியுள்ள கேள்விகள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாடு பல விஷயங்களில் முன்னோடியாக இருந்தது, இப்போது நெடுஞ்சாலைகள், பொதுப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பத் தொழில், நகர்ப்புற உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் மற்ற மாநிலங்கள் நம்மை முந்திச் செல்வதாக விமர்சித்துள்ளார்.
சுபாஷ் ராமசுப்ரமணியம் என்பவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதிவினை அப்படியே பார்ப்போம். "தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் மேம்பாட்டில் ஒரு முன்னோடியாக இருந்தது, ஆனால் இப்போது ஒரு எக்ஸ்பிரஸ் சாலை கூட இல்லை. நமக்குச் சிறந்த எக்ஸ்பிரஸ் சாலைகள் எப்போது கிடைக்கும்?

தமிழ்நாடு பொதுப் போக்குவரத்தில் ஒரு முன்னோடியாக இருந்தது. ஆனால் போக்குவரத்துத் துறை மிகக மோசமாக நிர்வகிக்கப்படுகிறது,. போக்குவரத்து துறையின் கடன் விரைவில் ஒரு லட்சம் கோடியைத் தொடும். இவ்வளவு பெரிய கடன் சுமையை எப்படித் தாங்கப் போகிறார்கள்?
தமிழ்நாடு 24x7 மின்சாரம் வழங்குவதாகப் பெருமை பேசுகிறது. ஆனால் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன்கள் இப்போது ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. நுகர்வோரில் வெறும் 3% பேர் மட்டும் 97% பேருக்கு மானியம் கொடுக்கும் வகையில் மின்கட்டணத்தில் 90% செலுத்துவது எவ்வளவு காலம் நீடிக்கும்? ஏன் இந்த நிலை?
இன்றைய சென்னை, அதாவது அந்த காலத்து மெட்ராஸ், 1911-லேயே D'Angelis விமானத்தை இயக்கியது . 1930களில் விமான நிலையம் நிறுவப்பட்டது. விமானப் பயண வரைபடத்தில் முக்கியமான இடத்தில் இருந்தது. தமிழ்நாடு தான் சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவின் முதல் பெண் விமானி உஷா சுந்தரம்மாளை வழங்கியது. இன்றோ சென்னை விமான நிலையத்தின் நிலை ஒரு பேருந்து நிலையம் போல இருக்கிறது. ஓசூர் விமான நிலையத் திட்டம் பற்றி எந்த பெரிய முன்னேற்றமும் இல்லை..
ஐ.டி. சேவைகள் தொழில் 90களில் சென்னை பெரிய அளவில் வளர்ந்தது. அப்போது நாம் பெங்களூருக்கு அடுத்த இடத்தில்தான் இருந்தோம். ஆனால் இப்போதோ புனே மற்றும் ஹைதராபாத் நகரங்கள் சென்னையை விட ஐடி துறையில் முன்னேறி உள்ளன. முதல் வேலையைத் தேடும் ஐடி பொறியியலாளர்கள் கூட, பெங்களூருவில் தங்கள் முதல் வேலையை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏன்? இது எப்போது மாறப் போகிறது?
40 செ.மீ மழை பெய்தாலும் தாங்கும் அளவுக்குச் சென்னைக்குச் சிறந்த வடிகால் வசதிகள் மற்றும் தரமான சாலைகள் எப்போது கிடைக்கும்? இவைதான் தேர்தலுக்கு முந்தைய விவாதங்களில் கட்சிகள் விவாதித்து எழுப்ப வேண்டும் என்று நான் விரும்பும் பிரச்சனைகள். மக்களும் இது போன்ற வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகளைப் பற்றிப் பேச வேண்டும், கையில் எடுக்க வேண்டும். ஆனால் இதுபற்றி பேசாமல், நாம் இன்னும் 100 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி இருக்கிறோம். சாதிப் பெயர்களை நீக்குவது மற்றும் நடிகர்களுக்குப் பின்னால் செல்வது பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். இது பெரிய சோகம்" இவ்வாறு கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications