கேரளத்தின் பெரியார் அய்யங்காளி! தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் முதல் போராளி! 158வது பிறந்தநாள் இன்று!
சென்னை: கேரளத்தின் பெரியார் என்றழைக்கப்படும் அய்யங்காளியின் 158 வது பிறந்த பிறந்த நாளை முன்னிட்டு விசிக தலைவர் திருமாவளவன் அவரை நினைவு கூர்ந்துள்ளார்.
தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் முதல் போராளி அய்யங்காளி என்றச் சிறப்பும் பெருமையும் அவருக்கு உண்டு.
இது தொடர்பான விவரம் வருமாறு;

மாட்டுவண்டி பயணம்
தாழ்த்தப்பட்ட மக்கள் தெருக்களில் நடந்து சென்றாலே அடித்து சித்திரவதை செய்த மேலாதிக்க சாதியினரை எதிர்த்து இரண்டு வெள்ளை மாடுகளை வாங்கி மாட்டுவண்டியாக பூட்டி மாடுகளின் கழுத்தில் மணியை கட்டி தனி ஆளாக வீதியில் ஓட்டியவர் அய்யங்காளி. அமைதியாக கூட தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட தெருக்களில் மணிச்சத்தத்துடன் மாட்டுவண்டியில் பயணம் செய்தார் அய்யங்காளி.

தலைப் பாகை
மாட்டு வண்டி பயணத்தின் போது வெள்ளை வேட்டி கட்டி, அங்கவத்திரம் உடுத்தி, தலைப்பாகையுடன் அருகில் உள்ள சந்தைக்கு மாட்டு வண்டியை ஓட்டி சென்றவர் அய்யங்காளி. இவையனைத்தும் அன்றைய திருவிதாங்கூரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தடை செய்யப்பட்டிருந்த காரியங்களாகும்.

முதல் போராட்டம்
சந்தையிலிருந்து திரும்பி வரும் போது மேல்சாதியினர் என தங்களை கூறிக்கொள்ளும் சிலர் அவரைத் தடுத்து நிறுத்தினார்கள் என்பது வரலாறு. ஆனால் அவர் தன்னுடைய கனத்த குரலில் தன்னிடமிருந்த கத்தியைக் காட்டி மிரட்டி அவர்களை விரட்டினார்.வரலாற்றில் அய்யங்காளியின் இந்தப் போராட்டமே தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முதல் ஆயுதப் போராட்டம் என வர்ணிக்கப்படுகிறது.

திருமா பங்கேற்பு
கேரள பெரியார் என்றழைக்கப்படும் அய்யங்காளியின் 158 வது பிறந்த பிறந்த நாளை முன்னிட்டு இன்று கோழிக்கோட்டில் கேரள வெல்ஃபேர் பார்ட்டி சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications