இரண்டாம் கட்ட ‘தவெக கல்வி விருது விழா’.. திருவான்மியூர் மண்டபத்திற்கு துள்ளலாக என்ட்ரி கொடுத்த விஜய்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விஜய் வருகை தந்திருக்கிறார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும், உதவிகளையும் நடிகர் விஜய் வழங்கி வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு இதேபோல மாணவர்களை அவர் சந்தித்திருந்தது பேசுபொருளாகியிருந்தது. இதனை தொடர்ந்து அவர், 'தமிழக வெற்றிக் கழகம்' எனும் அரசியல் கட்சியையும் தொடங்கியிருந்தார்.

இந்நிலையில் இரண்டாவது ஆண்டாக இந்த முறையும் மாணவர்களை விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார். கடந்த முறையை போல அல்லாமல் இந்த முறை, இரண்டு வெவ்வேறு நாட்களாக மாணவர்களை விஜய் சந்திக்கிறார். அந்த வகையில் முதல் சந்திப்பு கடந்த 28ம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.
இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இரண்டாவது கட்ட விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. சென்னை திருவான்மியூரில் தனியார் மண்டபத்தில் நடைபெறும் இந்த விழாவில் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் என 19 மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு வாழ்த்துகளையும், பரிசு பொருட்கள் மற்றும் உதவி தொகையையும் விஜய் வழங்குகிறார்.
740 மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்கள் என மொத்தமாக 3500க்கும் அதிகமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். கடந்த முறை அதிகாலை 6 மணிக்கே விஜய் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்துவிட்டார். இந்நிலைவயில், இன்றும் 7 மணியளவில் மண்டபத்திற்கு வந்திருக்கிறார்.
அரசியல் கட்சியின் தலைவராக மாணவர்களை சந்திப்பது இதுதான் முதல் முறை என்பதால், அவர் என்ன பேசுவார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக அவருடைய நடவடிக்கை தமிழக அரசுக்கு ஆதரவானது போன்று இல்லை. அதே நேரம், வெளிப்படையாகவும் மத்திய அரசை எதிர்க்கவில்லை. இப்படி இருக்கையில் அடுத்தக்கட்ட அவருடைய நடவடிக்கை குறித்து அரசியல் ஆர்வலர்கள் பலரும் ஆருடம் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications