அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயில விருப்பமா! விண்ணப்பிக்க இன்றுதான் கடைசி நாள்.. அப்ளை செய்வது ஈசி
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிக்க இன்றுதான் கடைசி நாள். கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கிய விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவடைகிறது.
தமிழ்நாடு முழுவதும் தொழில்நுட்ப கல்வி இயக்குநகரத்தின் கீழ் 54 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும், 3 இணைப்பு கல்லூரிகள் இருக்கின்றன. இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு கட்டண விலக்கு இருக்கிறது. பட்டைய படிப்பு பயில விரும்பும் மாணவர்கள் http://www.tnpoly.in/ எனும் தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

இதில், தகுதி பெற்ற மாணவர்களுக்கான தர வரிசைப் பட்டியல், அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும். ஏற்கெனவே பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழக அரசு பல்வேறு மாற்றங்களை அறிவித்திருக்கிறது. இந்த ஆண்டு முதல் 5 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொழிலகங்களின் தேவைகளுக்கேற்ப புதிய சான்றிதழ் (சாண்ட்விச்) பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுத்தப்படுகிறது.
அதேபோல, 31 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு கண்ணாடியிழை மூலம் 1 ஜிபிபிஎஸ் அளவிலான தொடர் இணையதள வசதி இணைப்பு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது தவிர, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, கெலமங்கலம், தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஆகிய 3 பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் படிக்கும்போதே வருமானம் ஈட்டும் வகையில், பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.
இந்த புதிய அம்சங்கள் அனைத்தும் பாலிடெக்னிக் கல்லூரிகள் மீதான ஆர்வத்தை மாணவர்களிடையே அதிகரிக்க செய்திருக்கிறது. இந்நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிக்க இன்றுதான் கடைசி நாளாகும்.












Click it and Unblock the Notifications