தமிழகத்தில் இன்றைய தினம் கொரோனா தடுப்பூசி மெகா முகாம் இல்லை
சென்னை: தமிழகத்தில் இன்றைய தினம் கொரோனா தடுப்பூசி முகாம் இல்லை என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பண்டிகை காலம் மற்றும் தொடர் விடுமுறை என்பதால் இன்றைய தினம் கொரோனா தடுப்பூசி முகாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 12ம் தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19ம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 16.43 லட்சம் பேருக்கும், 26ம் தேதி 23 ஆயிரங்களில் 25.04 லட்சம் பேருக்கும், கடந்த 3ம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 17.19 லட்சம் பேருக்கும், கடந்த 10ம் தேதி 32 ஆயிரம் இடங்களில் 22.52 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த முகாமுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் 6ஆவது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் வியாழக்கிழமை ஆயுத பூஜை, வெள்ளிக்கிழமை விஜயதசமி என்பதால் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் மக்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்றுள்ளனர். இந்த நேரத்தில் முகாம் நடத்தினால் பொதுமக்களின் வருகை மிகவும் குறைவாக இருக்கும்.
அதனால் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படவில்லை என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை நடத்தப்பட்ட 5 கட்ட முகாம்கலில் 1.10 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ரத்து செய்யப்பட்ட 6ஆவது கட்ட தடுப்பூசி வரும் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. எனினும் இன்றைய தினம் வழக்கமான இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications