ஆகா ஆப்படிக்குதே டோல்கேட்..அதிரடியாக கட்டணத்தை உயர்த்திய NHAI.! இவ்வளவு ரூபாய் அதிகமா? முழு விபரம்.!
சென்னை: நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் வானகரம், பரனுர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்க கட்டணம் உயர்கிறது. மீதமுள்ள 38 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது 40 சுங்கச் சாவடிகளில் எவ்வளவு கட்டணம் உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் 880க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், சுமார் 675 சுங்கச்சாவடிகளில் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச் சாவடிகளில் இரு சக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்வதற்கு சுங்கக் கட்டணம் செலுத்துவது அவசியம்.
இந்த கட்டணம் ஆண்டுக்கு ஒரு முறை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மாற்றி அமைக்கப்படுகிறது. ஏப்ரல் மாதமும், செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் சுங்க கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை.

தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்ததும் ஜூன் மூன்றாம் தேதி சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அதற்கு பிறகு செப்டம்பர் ஒன்றாம் தேதி இரண்டாம் கட்டமாக கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் இருக்கும் நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் புதிதாக 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்த ஆண்டு தமிழகத்தில் 78 சுங்கச்சாவடிகளில் முதல் கட்டமாக 40 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமான NHAI அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில் சென்னை, வானகரம், சூரப்பட்டு, சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி, தாம்பரம் திண்டிவனம் நெடுஞ்சாலையில் ஆத்தூர் சுங்கச்சாவடி, செங்கல்பட்டு பரனுர் சுங்கச் சாவடி, பட்டறை பெரும்புதூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
தற்போது கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு இருக்கும் 40 சுங்கச்சாவடிகள் தவிர்த்து மீதமுள்ள 38 சுங்கச்சாவடிகளில் இரண்டாம் கட்டமாக வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டண உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு வகை வாகனங்களுக்கு ஏற்ப ஐந்து ரூபாய் முதல் 25 ரூபாய் வரை சுங்க கட்டண உயர்வு இருக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை போக்குவரத்து மற்றும் பிற வசதிகளின் அடிப்படையில் 33 ரூபாய் முதல் 125 ரூபாய் வரை கார்களுக்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
அந்த வகையில் ஒருவர் தற்போது ஒருமுறை பயணத்திற்கு 125 ரூபாய் செலுத்துகிறார் என்றால் அவர் 125 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை செலுத்த வாய்ப்பு இருக்கிறது. இலகுரக வர்த்தக வாகனங்கள் தற்போது 54 ரூபாய் முதல் 215 ரூபாய் வரை தோல் கட்டணம் செலுத்தும் நிலையில், அந்த கட்டணம் 25 ரூபாய் முதல் 2 40 வரை உயரலாம். பஸ் மற்றும் லாரிகளுக்கு ஒருமுறை பயணத்திற்கு 86 ரூபாய் முதல் 435 வரை சராசரியாக வசூலிக்கப்படும் நிலையில் அவர்கள் 100 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
இரு முறை பயணத்திற்கு இந்த கட்டணம் இரு மடங்காக உயரக்கூடும். அதே நேரத்தில் 24 மணி நேரத்திற்குள் பயணம் செய்வதற்கு 110 ரூபாய் முதல் 255 ரூபாய் வரை தற்போது கட்டண வசூலிக்கப்படும் நிலையில், அந்த கட்டணம் 140 முதல் 120 ரூபாய் வரை உயரலாம் என கூறப்படுகிறது. மாதாந்திர பாஸ் வைத்திருப்பவர்கள் 2650 முதல் 8750 ரூபாய் வரை செலுத்தும் நிலையில் இந்த கட்டணம் 3000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை உயரலாம் என கூறப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை சுங்க கட்டண வசூலில் ஐந்தாவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் 4220 கோடி ரூபாய் சுங்க கட்டணமாக வசூல் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. 2019-20ஆம் ஆண்டில் ரூ.27,503 கோடியாக இருந்த சுங்கக்கட்டண வசூல், கடந்த 4 ஆண்டுகளில் 135% அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவற்றில் தற்போது மராமத்து பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. மேலும் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என அடிக்கடி வாகன ஓட்டிகள் தகராறு ஈடுபடும் சம்பவங்களையும் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் லாரி உரிமையாளர்கள் வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள் ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை ரூ.100யை தாண்டி இருக்கும் நிலையில் சுங்கச்சாவடி கட்டண உயர்வு காரணமாக போக்குவரத்து செலவும் அதிகரிக்கும் என்பதால் விலைவாசி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலை மனதில் வைத்து கடந்த ஆண்டு கட்டண உயர்வை மத்திய அரசு தள்ளிவைத்த நிலையில், தற்போது கட்டண உயர்வு ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்ற அறிவிப்பு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கோரிக்கை: தமிழ்நாட்டிலுள்ள பல சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. பல சாலைகளுக்கு செய்யப்பட்ட முதலீட்டை விட கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டு விட்ட பிறகும் அங்கு தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், முதலீட்டுக்கான வட்டி, பராமரிப்பு செலவுகள் போன்றவற்றை அதிகரித்துக் காட்டியும், சுங்கக் கட்டண வசூலைக் குறைத்துக் காட்டியும் மோசடிகள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு சுங்கச்சாவடியையும் ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் கடக்கின்றன? அவற்றின் மூலம் எவ்வளவு ரூபாய் கட்டணம் வசூலாகியிருக்கிறது என்பதை நிகழ் நேரத்தில் தெரிவிக்கும் வகையில் டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்பட வேண்டும் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.












Click it and Unblock the Notifications