இரவு முழுக்க விடாமல்.. கூட்டி பெருக்கிய தூய்மை பணியாளர்கள்.. 300 டன் தீபாவளி குப்பை.. பரிதாப நிலை
சென்னை: இரவு முழுக்க விடாமல் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
பொதுவாக தீபாவளி பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான். அதிகாலையே எண்ணெய் தேய்த்து குளிப்பது, புதிய உடை உடுத்தி வெடி வெடிப்பது, பல்வேறு இனிப்புகளை சாப்பிடுவது, இட்லி மட்டன் குழம்பி சாப்பிடுவது என்று தீபாவளி கொண்டாட்டமாக இருக்கும்.

அதே சமயம் பொங்கல், பூஜை போல இல்லாமல் தீபாவளி பண்டிகைக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் காற்று மாசு மற்றும் குப்பைதான். தீபாவளியில் வெடி வெடிப்பதால் அதிக அளவு புகை ஏற்பட்டு காற்று மாசு ஏற்படும். அதேபோல் கடுமையான சத்தம் காரணமாக ஒலி மாசு ஏற்பட்டு பொதுமக்கள், வயதானவர்கள், விலங்குகள், பறவைகள் பாதிக்கப்படும்.
இதெல்லாம் போக மிக அதிக அளவில் குப்பைகள் சேர்ந்து சாலைகள் மிக மோசமாக காட்சி அளிக்கும். அந்த வகையில் நேற்று சென்னையில் சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
குப்பைகள்: இரவு முழுக்க விடாமல் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று மாலை தொடங்கிய சுத்திகரிப்பு பணிகள் இன்னும் நடந்து வருகின்றன. பல இடங்களில் இருக்கும் குப்பைகளை கைகளால் அள்ளி அதற்கு உரிய வாகனங்களில் ஏற்றி அனுப்பி வருகிறார்கள்.

பட்டாசு பேப்பர்கள் தெருக்களை நிரப்பி உள்ளன. இதனால் சாலைகள் குப்பை கடலாக மாறி உள்ளது. இந்த பேப்பர்களை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. மாநகராட்சி கணக்குப்படி 300 டன் குப்பைகள் சேர்ந்துள்ளன.
இதில் சென்னையில் நேற்று இரவு வரை, சுமார் 100 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் கழிவுகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. 200 டன் வரை பட்டாசு கழிவுகள் சேகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தகவல். இதற்காக மட்டும் 19,600 தூய்மை பணியாளர்கள் இரவு முழுக்க பணிகளை செய்து வருகின்றனர்.
காற்று மாசு: எல்லா வருடமும் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிகரிக்கும். இந்த வருடமும் அதேபோல் காற்று மாசு அதிகரித்துள்ளது. முக்கியமாக சென்னை, டெல்லி, கொல்கத்தாவில் இன்று காற்று மாசு மோசமாகி உள்ளது.

சென்னையில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக்குறியீடு 250க்கு மேல் உள்ளது. இது மிக மோசமான நிலைமை ஆகும். நீண்ட காலத்திற்கு மக்கள் இதை சுவாசிக்கும் போது ஆரோக்கிய பாதிப்புகளை இது ஏற்படுத்தும்.
வேளச்சேரியில் தரக்குறியீடு 301ஐ தொட்டுள்ளது: இது மிக மோசமான ஆரோக்கியமான நிலை ஆகும். இதை நீண்ட காலம் சுவாசிக்கும் பட்சத்தில் அது சுவாச நோய்களை ஏற்படுத்துகிறது. பெருங்குடியில் தரக்குறியீடு 231ஐ தொட்டுள்ளது: இதுவும் ஆரோக்கியமற்ற நிலையாகும். செங்கல்பட்டில் தரக்குறியீடு 242ஐ தொட்டுள்ளது. ஏற்கனவே நுரையீரல் கோளாறுகள் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்படலாம். புதுச்சேரியில் தரக்குறியீடு 243ஐ தொட்டுள்ளது. மதுரையில் தரக்குறியீடு 132ஐ தொட்டுள்ளது. பாட்னா 405, நொய்டா 402, டெல்லி 359, கொல்கத்தா 355 ஆகியவை காற்று மாசுவின் தற்போதைய அளவு ஆகும்.












Click it and Unblock the Notifications