மலையாள திரையுலகமே ஆடிப்போச்சு.. ஒரே நேரத்தில் சுற்றி வளைக்கப்பட்ட டாப் நடிகர்கள்.. காரணம் என்ன?
சென்னை: மலையாள நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சக்கலக்கல் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலையில் இருந்தே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு, கேரளா என மொத்தம் 17 இடங்களில் சோதனை நடைபெறும் நிலையில் மலையாள நடிகர்கள் வீட்டில் ஒரே நேரத்தில் ஏன் இந்த சோதனைக்கான காரணம் என்பதை இங்கு பார்க்கலாம்.
பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சக்கலக்கல், மம்மூட்டி உள்ளிட்ட நடிகர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் பூடானில் இருந்து சட்டவிரோதமாக சொகுசு கார்களை கடத்தி முறைகேடாக விற்பனை செய்த விவகாரத்தில் இந்த சோதனை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா என மொத்தம் 17 இடங்களில் சோதனை நடைபெற்றது.

ஆடம்பர சொகுசு கார்கள்
சென்னை அபிராமி புரத்தில் உள்ள துல்கர் சல்மானின் இல்லத்திலும் இந்த சோதனை நடைபெற்றது. அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லேண்ட் க்ரூசர், டிஃபெண்டர் மற்றும் மசெரட்டி போன்ற ஆடம்பர சொகுசு கார்களை சட்டவிரோதமாக இந்தியா - பூடான் / நேபாளம் வழியாக இறக்குமதி செய்து பதிவு செய்து நடைபெற்ற மோசடி தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
கார் இறக்குமதியில் கோவையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. சட்டவிரோத பணம், அந்நிய செலாவணி மூலம் பயன் அடைந்தவர்கள் யார்? என்பது குறித்து அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட இந்த கார்களை துல்கர் சல்மான், பிரித்விராஜ் ஆகியோர் வாங்கியிருப்பதாக கூறப்பட்டது.
எதற்காக இந்த சோதனை
இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில், அவர்களது காரையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் நிலுவையில் இருக்கக்கூடிய நிலையில், இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலமாக இந்த சொகுசு கார்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அந்நிய செலாவணி முறைகேட்டில் பலன் அடைந்தவர்கள் யார் யார்? பின்னணியில் இருப்பது யார் என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளவே அமலாக்கத்துறை இந்த சோதனையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதா? பணம் எதுவும் பறிமுதல் செய்யப்பட்டதா? என்பது சோதனை முடிவுக்கு பிறகே தெரிய வரும் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
FEMA சட்டம் பிரிவு
FEMA சட்டம் பிரிவு 3, 4 விதிகளை மீறியதற்கான முகாந்திரம் கண்டறியப்பட்டதால் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்நிய செலாவணி முறைகேடு, ஹவாலா வழியாக எல்லை தாண்டிய பண பரிவர்த்தனை ஆகியவை மூலமாக இந்த கார்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு பிறகு 39 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 150-200 கார்கள் இப்படி முறைகேடாக இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்று சுங்கத்துறை தெரிவித்தது. துல்கர் சல்மான், அமித் சக்கலக்கல் ஆகியோருக்கு சொந்தமான கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பிரித்விராஜ் வீட்டிற்கு அதிகாரிகள் சென்ற போதிலும், அவரது வீட்டில் இருந்து கார்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications