சென்னையின் முக்கிய சாலையில்.. ஒருவாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்.. வாகன ஓட்டிகள் நோட் பண்ணிக்கோங்க
சென்னை: மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதன் காரணமாக, சென்னை அடையார் - இந்திரா நகர் பகுதியில் இன்று முதல் ஒருவாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து போலீசார் கூறியுள்ளனர்.
சென்னையில் போக்குவரத்துக்கு நெரிசலை குறைப்பதற்காக முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது., சென்ட்ரல் முதல் கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரையிலும், விம்கோ நகர் முதல் கிண்டி வழியாக விமான நிலையம் வரையிலும் சுமார் 55 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மெட்ரோ ரயில் பணி: இதையடுத்து இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் நடந்து வருகிறது. மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 3 வது வழித்தடத்தில் 45.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதேபோல், சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை 4 வது வழித்தடத்தில் 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மேலும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 5 வது வழித்தடத்தில் 47 கிலோ மீட்டர் தொலைவுக்கும் பணிகள் நடக்கிறது. ரூ.63,246 கோடியில் நடைபெறும் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது.

ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்: இந்த நிலையில், சென்னை அடையார் - இந்திரா நகர் பகுதியில் இன்று முதல் ஒருவாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து போலீசார் கூறியுள்ளனர். இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் கூறியதாவது:- சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் அடையார் இந்திரா நகரில் நடைபெற உள்ளது. இப்பணிகளை கருத்தில் கொண்டு இந்திரா நகரில் இன்று முதல் ஒரு வார காலத்துக்கு போக்குவரத்து மாற்றங்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
எம்.ஜி.சாலை சந்திப்பில் இருந்து இந்திரா நகர் 2-வது அவென்யூ வழியாக ஓ.எம்.ஆர். நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு 2-வது அவென்யூ, 3-வது பிரதான சாலை, 21-வது குறுக்கு தெரு, இந்திரா நகர் 3-வது அவென்யூ வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். அதேபோல, கலாஷேத்ராவில் இருந்து ஓ.எம்.ஆர். நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம் போல் இயங்கும்.
ஓ.எம்.ஆரில் இருந்து: கே.பி.எனில் இருந்து ஓ.எம்.ஆர். நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம். ஓ.எம்.ஆரில் இருந்து 2-வது அவென்யூ வழியாக எல்.பி.சாலையை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. 2-வது அவென்யூ, 3-வது பிரதான சாலை, இந்திரா நகர் முதலாவது பிரதான சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
கலாஷேத்ராவில் இருந்து இந்திரா நகர் 3-வது அவென்யூ வழியாக எல்.பி. சாலை நோக்கி வரும் வாகனங்கள் இந்திரா நகர் 4-வது அவென்யூ, 3-வது பிரதான சாலை, இந்திரா நகர் 2-வது அவென்யூ வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். ஓ.எம்.ஆர். மற்றும் கலாஷேத்ராவில் இருந்து கே.பி.என்.சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம். இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications