மாமல்லபுரம் அருகே பகீர் சம்பவம்.. பட்டப் பகலில் கார் மோதி மாடு மேய்த்துக்கொண்டிருந்த 5 பெண்கள் பலி!
சென்னை: சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கிச் சென்ற கார் மோதி 5 பெண்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பழைய மகாபலிபுரம் சாலை ஓரமாக பண்டிதமேடு என்ற பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டு சாலையோரம் அமர்ந்திருந்த பெண்கள் மீது மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பண்டிதமேடு பகுதியில் சாலையோரம் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு இருந்த விஜயா, யசோதா, லோகாம்பாள், கௌரி, ஆனந்தம்மாள் ஆகிய 5 பெண்கள் மீது கார் மோதியதில் ஐவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். சுமார் 120 கி.மீ வேகத்தில் அதிவேகமாக வந்த கார் சாலை ஓரம் அமர்ந்திருந்த 5 பெண்கள் மீது ஏற்றி இழுத்துச் சென்றுள்ளது.

இதில் உடல் நசுங்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். உடல் நசுங்கி உயிரிழந்த 5 பேரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டி வந்து, 5 பெண்கள் மீது ஏற்றிய இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து தாக்கினர். பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசாரிடம் அவர்கள் இருவரையும் ஒப்படைத்தனர். விபத்தை ஏற்படுத்திய காரில் வந்த 2 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்கிருந்த பொதுமக்கள், போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு, அந்த 2 இளைஞர்களையும் கைது செய்ய வேண்டாம், எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த கோரச் சம்பவம் தொடர்பாக திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications