கிராமப்புற மாணவர்களுக்காக வருகிறது 'சிகரம் தொடு'.. 'நான் முதல்வன்' திட்டத்தில் மேஜர் சர்ப்ரைஸ்
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டங்களில் ஒன்றாக 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் 1,000 கிராமப்புற மாணவர்களுக்கு உயர் வேலைவாய்ப்புக்கான பயிற்சி அளிக்கும் வகையில் 'சிகரம் தொடு' என்ற பெயரில் புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்க உள்ளது. 'சிகரம் தொடு' திட்டத்தில் சேருவதற்கு கிராமப்புற மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டசபை தேர்தல் முடிந்து முதல்வர் ஸ்டாலின் கொண்டுவரப்போகும் ஒரு திட்டம் திமுகவினருக்கு கூட தெரியாது. ஏன் யாருக்குமே இப்படி ஒரு திட்டம் பெரிய அளவில் உருவாகப்போகிறது. அதன் மூலம் கிராமப்புற ஏழை இளைஞர்கள் பயன்பெற போகிறார்கள் என்பது தெரியாது. அந்த திட்டம் தான் 'நான் முதல்வன்' திட்டம். தமிழக முதல்வரின் கனவு திட்டமான இந்த திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ம் தேதி, மு க ஸ்டாலினின் பிறந்தநாளில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகம் செயல்படுத்தி வருகிறது.

நான் முதல்வன் திட்டப்படி, தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதற்கான வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கும், வேலை தேடும் இளைஞர்களுக்கும் இந்த திட்டம் இணைப்பு பாலமாக இருப்பதால் பல அரசு பள்ளி மாணவர்கள் இந்த திட்டத்தில் சேர அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 25 லட்சம் இளைஞர்கள் பயன் அடைந்துள்ளனர். நான் முதல்வன் திட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் சிறப்பான வேலைவாய்ப்பு பயிற்சிகளை பெற்று தனியார் துறைகளில் வேலைவாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். தொடர்ந்து ஆர்வமுடன் திட்டத்தில் சேர்ந்து வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.
இதனால் உற்சாகமான முதல்வர் ஸ்டாலின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தொடர்ந்து பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மத்திய, மாநில அரசு பணிகளுக்கு நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உணவு, தங்கும் வசதியுடன் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
அடுத்ததாக கிராமப்புற மாணவர்களுக்கும் உயர் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 'சிகரம் தொடு' என்ற பெயரில் திட்டம் தொடங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், கலை, அறிவியல் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சிறந்த 1,000 மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து உயர் வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படுகிறது.
இந்த திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேசும் பயிற்சி, நேர்முக தேர்வுகளை துணிச்சலாக எதிர்கொள்ளுதல் உள்பட பயிற்சிகளும் வழங்கப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு (2025) உயர் கல்வியை முடித்து வெளியே வரும் கிராமப்புற மாணவர்கள் இந்த திட்டத்தால் பயன் பெற போகிறார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனர் இன்னசென்ட் திவ்யா கூறும் போது, "சிகரம் தொடு திட்டத்தில் சேருவதற்கு கிராமப்புற மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பிக்கிறார்கள்.. இதில் தகுதியான 1,000 மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு 'சிகரம் தொடு' திட்டத்தின் கீழ் உயர் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்க உள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications