சில்லறை கேட்டால் ‘நோ’.. 2000 நோட்டு அரசு பஸ்களில் வாங்கப்படுமா? அமைச்சர் சிவசங்கர் கொடுத்த விளக்கம்!
சென்னை : அரசுப் பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை பயணிகளிடம் இருந்து வாங்க வேண்டாம் என நெல்லை போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்ட தகவல் வெளியாகி குழப்பத்தை விளைவித்த நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, பொதுமக்கள் அவற்றை வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள அவகாசம் அளித்துள்ளது. அதுவரை அனைத்து இடங்களிலும் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லும் என்றும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பல்வேறு இடங்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லுமா செல்லாதா என்ற குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் திருநெல்வேலி உட்பட சில போக்குவரத்து கோட்டங்களைச் சேர்ந்த போக்குவரத்து மேலாண் இயக்குநர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை பயணிகளிடமிருந்து வாங்க வேண்டாம், அந்த நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைத்து மாற்றுவதில் சிக்கல் இருப்பதால் பயணிகளிடம் பக்குவமாக எடுத்துக் கூறி 2000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதை தவிர்க்குமாறு கூறப்பட்டிருந்தது.
இந்த அறிவுறுத்தல் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதேசமயம், ஆம்னி பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பெற்று டிக்கெட் கொடுப்பதற்கு தடையில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், நேற்று நெல்லை மண்டலத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெறக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்ததை, திரும்பப் பெற வேண்டும் என்று போக்குவரத்து துறைக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து சில்லறை கேட்டால் மட்டும் கொடுக்கக் கூடாது என்றும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து டிக்கெட் எடுப்பதற்கு அனைத்து பணிமனைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications