அண்ணாமலைக்கு அதிகார போதை.. அவர் உண்மையில் ஐபிஎஸ் படித்தவர் தானா? அமைச்சர் சிவசங்கர் ஆவேசம்!
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிகார போதையில் பேசி வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.
திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக ஒரு எதிர்க்கட்சியே அல்ல. அவர்கள் கண்ணுக்கு தெரியாத கட்சியாகவும், நோட்டாவுக்கு கீழ் வாக்கு வாங்கக் கூடிய கட்சியாகவும் மட்டுமே பாஜக இருக்கிறது.

நோட்டாவும் பாஜகவும்
தமிழ்நாட்டில் பாஜக வரக் கூடாது என்று ஏன் செயல்படுகிறோம் என்றால், இந்த மண்ணில் அவர்கள் கால் பதித்தால் நமது மொழி அழிந்துவிடும். தமிழை அழித்துவிட்டு இந்தியை கொண்டு வருவதற்கான பணிகளை செய்வார்கள். பண்பாடு, கலாச்சாரம் அழிக்கப்படும். அதிமுகவினர் கட்சி யாருடையது என்று அடித்து கொள்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், பாஜகவுக்கு அடிமையாக இருப்பதில் அதிமுகவில் போட்டி நிலவி வருகிறது. டெல்லியில் அமித் ஷா சொல்வதை யார் செய்கிறார்கள் என்ற பந்தயம் நடக்கிறது என்று விமர்சித்தார்.

அண்ணாமலைக்கு அதிகார போதை
தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை மட்டுமல்ல, பத்திரிகையாளர்களையும் தரக்குறைவாக பேசியுள்ளார். அவர் யாரையும் தனக்கு நிகராக கருதுவதில்லை. அவர் ஐபிஎஸ் பதவியில் இருந்த போது, அதிகாரத்துடன் இருந்திருக்கலாம். ஆனால் அரசியலுக்கு வந்துவிட்ட பின், அதிகார போதையில் பேசுவது தகுதியானதல்ல. இதன் மூலம் மக்கள் மத்தியில் அண்ணாமலையின் செயல்பாடுகளால் அவர் ஐபிஎஸ் படித்தவர் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜக பந்த் பற்றி கருத்து
தொடர்ந்து, கோவை பந்த் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஒவ்வொரு விஷயத்திற்கும் பாஜக தரப்பில் நீதிமன்றத்தை நாடுவதும், அதன் மூலம் அரசுக்கு நிர்பந்தம் அளிக்கலாம் என்று நினைப்பதையும் பார்த்து வருகிறோம். ஆனால் கோவை விவகாரத்தில் நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது. பாஜகவினரும் பந்த் அறிவிக்கவில்லை என்று சொல்லும் சூழல் வந்துள்ளது. தமிழ்நாடு மக்கள் வன்முறையை தூண்டுவதற்கு அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

புல்வாமா தாக்குதல்
தொடர்ந்து கோவை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டதாக ஆளுநர் ஆர்என் ரவியின் குற்றச்சாட்டு பற்றிய கேள்விக்கு, சில ஆண்டுகளுக்கு முன் இந்திய ராணுவ வீரர்களில் மீது புல்வாமாவில் தாக்குதல் நடைபெற்றது. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் போது குற்றச்சாட்டுகளை வைக்க வேண்டும் என்றால், மோடி அரசும் கையாலாகாத அரசாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். குஜராத்தில் மோடியின் நண்பரான அதானியின் துறைமுகத்தில் ரூ.30 ஆயிரம் கோடிக்கு அதிகமான மதிப்பில் போதைப்பொருள் சிக்கியது. பாஜக கோட்டையில் இப்படி ஒரு சூழல் இருக்கிறது. இதற்கு பதில் சொல்லிவிட்டு மற்றவைகளை பேசலாம் என்று பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications