"பேரு வச்சியே ராசா.. சோறு வச்சியா?" அதிமுக MLAவுக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலால் சட்டசபையில் கலகலப்பு
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு “ஒரு சினிமா வசனம் தான் நினைவுக்கு வருகிறது” எனக் கூறி அவையில் கலகலப்பை ஏற்படுத்தினார் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.
கட்டி முடிக்கப்பட்ட போக்குவரத்து பணிமனைகளை திறப்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலகலப்பாக பதில் அளித்தார்.

அதிமுக எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், “கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள எலத்தூர், மோட்டூர், நட்சத்திரக்கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து பணிமனை, நான் கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து ரூபாய் 1 கோடி நிதி ஒதுக்கி கட்டப்பட்ட பணிமனை. அதன்பிறகு, ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு சுற்றுச் சுவர், கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டன.
கடந்த 3 ஆண்டுகளாக திமுக அரசு வந்தபிறகு அதை திறக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். அந்த பணிமனை வீணாகக் கூடாது என்பதற்காக முதல்வரும், அமைச்சரும் நடவடிக்கை எடுத்து அந்த போக்குவரத்து பணிமனையை திறந்து வைத்து, அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றித் தரவேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதில் அளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “கலசப்பாக்கம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து பணிமனையில் தரைத்தளம் அமைக்கப்படவில்லை, மின் வசதிகள் செய்து தரப்படவில்லை. இன்னும் முழுமையாக பணிகள் முடியவில்லை.
நீங்கள் செய்திருந்தால் அப்போதே மிச்சப் பணிகளையும் செய்திருக்கலாம். கலசப்பாக்கதில் பேருந்து பணிமனையை கட்டிய அதிமுகவினர் அதை யார் திறப்பது என்ற போட்டியால் திறக்காமலே விட்டு விட்டனர். "பேரு வச்சியே ராசா.. சோறு வச்சியா?" என்ற திரைப்பட வசனம்தான் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. நிதிநிதி சீரடைந்த பிறகு மிச்சப் பணிகளையும் முடித்து திறந்து வைப்போம்” என கூறினார்.












Click it and Unblock the Notifications