Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹைகோர்ட் சொன்ன ஒற்றை வார்த்தை.. அடியோடு மாறிய நிலை.. இன்று முதல் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பண்டிகை காலத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதை ஏற்றுக் கொண்டு போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்று இன்று பணிக்கு திரும்பி உள்ளனர். இன்று முதல் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 96 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. அதாவது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் இருந்து தற்போது உள்ள ஸ்டாலின் தலைமையிலான அரசு வரை ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தரவில்லை... இதை அமல்படுத்த வேண்டும் என்பது ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதேபோல் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்தக்கூடாது என்பதும் ஊழியர்களின் கோரிக்கையாகும்.

Transport workers called off the strike and returned to work today; People are happy

இதேபோல் போக்குவரத்துத்துறையின் வரவு மற்றும் செலவுக்கு இடையிலான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம், இடதுசாரிகளின் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பா.ம.க., தே.மு.தி.க. போன்ற பல்வேறு அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதேநேரம் திமுகவின் தொ.மு.ச., ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளவில்லை.. இதனால் கணிசமாக பஸ்கள் ஓடின.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை நேரம் என்பதால் போக்குவரத்துக்கழக ஊழியர்களின் இந்த போராட்டம் தொடர்ந்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும் இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சோழிங்கநல்லூரைச் சேர்ந்த பால் கிதியோன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி வாதிடுகையில், "பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலனில் அரசு அதிக அக்கறை கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தை கைவிட்டுவிட்டு வரும் 19-ந் தேதி தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்பாக மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அகவிலைப்படி உயர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 6-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது. எனவே அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று (அதாவது நேற்று) அதிகாரிகளை வேலைக்கு செல்ல விடாமல் மிரட்டுகிறார்கள். எனவே இந்த வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

தொழிற்சங்கம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், "போக்குவரத்துக்கழக ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முறையாக அறிவிப்பு கொடுத்து அதன் பிறகே நடத்தப்படுகிறது. ஓய்வுபெற்ற 92 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வை வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு செவிசாய்க்க மறுத்து வருகிறது. ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வையாவது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைக்கூட அரசு ஏற்கவில்லை" என்றார்கள்.

இருதரப்பு வாதங்களுக்கு பின்பு கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, "தமிழ்நாட்டின் முக்கியமான பொங்கல் பண்டிகை நேரத்தில் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போராடுகிறார்கள். இந்த போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வருகிற 19-ந்தேதி வரை இந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். தமிழ்நாடு அரசும் தற்காலிகமாக 92 ஆயிரம் ஓய்வூதியதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரத்தை தற்போது வழங்கிவிட்டு பின்னர் கழித்துக்கொள்ளட்டும்" என்று யோசனை தெரிவித்தார்.

Transport workers called off the strike and returned to work today; People are happy

ஆனால் இதை இருதரப்பும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு நீதிபதிகள், "இருதரப்பும் இப்படி பிடிவாதம் காட்டினால் எப்படி?'' என்று கேள்வி எழுப்பினார்கள். இதையடுத்து தொழிற்சங்கங்கள் தரப்பில், "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வருகிற 19-ந்தேதி வரை இந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்'' என்று உத்தரவாதம் அளித்ததார்கள். இதையடுத்து நீதிபதிகள், "போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை)) முதல் வேலைக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு பணிக்கு திரும்பும் ஊழியர்கள் மீது எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையும் அரசு எடுக்கக்கூடாது" என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்கள்.
உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையடுத்து போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்று இன்று பணிக்கு திரும்பி உள்ளனர். இன்று முதல் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+