சோவியத் தலைவர்கள் ஆடம்பரமாக வாழ்ந்து வீழ்ந்தனர்.. தமிழ்நாட்டை சொல்லலப்பா- ஸ்ரீதர் வேம்பு குசும்பு
சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் அரங்கேறிய பின் ஜோஹோ நிறுவனத்தின் தலைவரான ஸ்ரீதர் வேம்பு தொடர்ச்சியாக திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு கருத்து, தற்போதைய தமிழக அரசியல் மற்றும் அதிகார மையங்களை நாசூக்காகவும், மறைமுகமாகவும் சாடும் வகையில் அமைந்துள்ளது.
ஸ்ரீதர் வேம்பு அந்தப் பதிவில், 1990-களில் சோவியத் யூனியன் யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென சரிந்து விழுந்தது. அதுவரை தன்னை ஒரு பெரும் வல்லரசாகக் காட்டிக் கொண்ட ஒரு அமைப்பு, மிகக் குறுகிய காலத்தில் சுக்குநூறானது அதன் எதிரி நாடான அமெரிக்காவிற்கே பெரிய ஆச்சரியம். சோவியத் அமைப்பில் தங்களை 'புரட்சியாளர்கள்' என்று அடையாளப்படுத்திக் கொண்ட தலைவர்கள், ஆடம்பரத்தின் உச்சத்தில் வாழ்ந்தனர்.

தங்களை நம்பிய சாதாரண உழைக்கும் மக்களிடமிருந்து அவர்கள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு தனி உலகத்தில் இயங்கினர். தங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த, உண்மையைச் சொன்ன மாற்றுக் கருத்துடைய எதிர்ப்பாளர்களை சிறையில் அடைத்து ஒடுக்கினர். இதனால், தலைமைகளுக்கு உண்மை நிலையைச் சொல்ல ஆட்களே இல்லாமல் போனது.
தங்களது சொந்த பொய்களைத் தாங்களே உண்மை என நம்பி, ஒரு மாய உலகத்தில் அவர்கள் வாழத் தொடங்கினர். அந்தப் பொய் உடைந்தபோது, பேரரசின் வீழ்ச்சியை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. நான் மேலே சொன்ன விஷயங்களுக்கும், சமகால தமிழ்நாட்டில் நாம் அண்மையில் கண்ட சித்தாந்த ரீதியிலான வீழ்ச்சிக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை.
இது முற்றிலும் என்னுடைய கற்பனை மட்டுமே, நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீதர் வேம்புவின் கருத்து இந்தியாவின் தற்போதைய அரசியலையும் பேசி இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கொள்கை இல்லாமல் வெறும் நிர்வாக மேம்பாட்டை மட்டுமே வலியுறுத்தி வந்த ஆம் ஆத்மி தேர்தலில் அரசியல் வெற்றி பெற்றது. தற்போது தமிழ்நாட்டிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது.
இதற்கு கொள்கை பிடிப்புள்ள கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் ஆடம்பரத்தின் உச்சியில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஸ்ரீதர் வேம்புவின் பதிவில் தமிழக அரசியல் கட்சிகளை சாடவில்லை என்று கூறினாலும் கூட, அவரின் கருத்து திமுக தலைமையை குறி வைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications