Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு ஊர்ல வரதன் என்ற விவசாயி! குறிகாரன் சொன்ன யோசனை! திமுக எம்.எல்.ஏ. சொன்ன குட்டி கதை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சி கிழக்குத் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் சொன்ன குட்டிக் கதை ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் வரவேற்பை பெற்றுள்ளது. ''வயலுக்குள் எலிகள்'' என்ற தலைப்பில் தனது முகநூல் பக்கத்தில் இனிகோ இருதயராஜ் கூறிய கதை வருமாறு;

''ஒரு ஊர்ல வரதன் என்கிற ஒரு விவசாயி இருந்தான்.அவன் ஒரு அக்மார்க் முட்டாள்.அவன் தன் வயலில் நெல்லை பயிரிட்டுக் கொண்டிருந்தான்.
அவனது வயலில் ஏகப்பட்ட தவளைகள் வசித்து வந்தன. ராத்திரியாகி விட்டால் போதும், அந்த தவளைகள் ஆனந்தமாக சத்தம் போட்டுக் கொண்டு இருக்கும். ஆனால் தவளைகளின் அந்த சப்தம் வரதனுக்கு ரொம்பவும் கடுப்பாக இருந்தது.

Trichy East Constituency DMK MLA Inigo Irudayaraj told short story

நம்ம நிலத்துக்குள்ள வந்து, நம்ம வயலில் பூச்சி புழுக்களை சாப்பிட்டு கொழுத்து போய் நம்மை தூங்கவிடாமல் செய்கின்றனவே இந்த தவளைகள்னு ரொம்ப கடுப்பு அந்த முட்டாள் விவசாயி வரதனுக்கு.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அவன் ஊரில் இருக்கும் குறிகாரனிடம் போனான். அவனிடம் போய் நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னான். அவன் "பூ இது ஒரு சாதாரண விஷயம். நீ என்ன பண்ற.. பக்கத்து ஊருக்கு போ. என்னுடைய நண்பன் ஒருத்தன் அங்க இருக்கான். ஏகப்பட்ட எலிகளை அவன் வளர்க்கிறான். தலைக்கு நூறு ரூபாய் கொடுத்து நாலு எலிகளை விலைக்கு வாங்கி உன் வயல்ல விட்டுரு.அந்த எலிகள் உன் தூக்கத்தை கெடுக்கும் தவளைகளை கொன்று தின்று விடும்.உன் பிரச்சினையும் தீர்ந்து விடும்" என்றான்.

"அது மட்டும் இல்லாம அந்த எலிகள் உன் நிலத்துக்கு பாதுகாப்பாக இருக்கும் . இரவு நேரங்களில் எந்த விலங்கும் உன் நிலத்துக்குள் நுழைந்து விடாமல் செக்யூரிட்டி வேலையும் பார்க்கும்! என்றும் சொன்னான் அந்த குறிக்காரன்.

உடனே வரதன், பக்கத்து கிராமத்திற்கு போய்,அங்கே இருந்ததிலேயே போஷாக்காக இருந்த நான்கு எலிகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து, நாள் நட்சத்திரமெல்லாம் பார்த்து ,ஒரு நாள் தாரை தப்பட்டை முழங்க கரகாட்டம், ஒயிலாட்டம் வைத்து எலிகளை ஊர்வலமாக அழைத்துக் கொண்டு போய் தனது வயலில் கொண்டு போய் விட்டான்.

வரதனின் இந்தச் செயல் அவனது வீட்டில் ஒருவருக்கும் பிடிக்கவில்லை. ஆனாலும் அவன் முரட்டு முட்டாள். வேறு வழி இல்லாமல் அவன் செய்வதற்கெல்லாம் தலையாட்டி கொண்டிருந்தார்கள் அவனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். காலங்கள் உருண்டோடின.நாளடைவில் வயலில் விடப்பட்ட எலிகள், ஒவ்வொரு தவளையாக சாப்பிட்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கொழுத்துப் பெருத்து வளர்ந்தன.

தவளைகளை தினம் தின்று தின்று அஜீரணக் கோளாறு ஏற்படும் போதெல்லாம், வயலில் நெற்மணிகளை தனது விருப்பத்திற்கு சாப்பிட்டு கொழுத்த அந்த எலிகள், தின்று தீர்ந்தவை போக மீதமிருந்த உமிகளையெல்லாம் கொஞ்ச தூரம் கொண்டு போய் சேர்த்து வைத்துக் கொண்டன.

பிறகு நெற்பயிர் வளர்ந்து அறுவடை பருவத்திற்கு வந்து விட்டது. அறுவடையும் நடந்தது. அந்த திருட்டு எலிகள் தின்றது போக, களத்தில் குவிந்து கிடந்தன நெல் மணிகள்.அந்த முட்டாள் விவசாயிக்கு சந்தோஷம்னா..அத்தனை சந்தோஷம்.

அப்போது அந்த நான்கு எலிகளும் வரதனுக்கு முன்பாக வந்து நிற்கின்றன. விவசாயி அந்த நான்கு எலிகளுக்கும் நன்றி சொன்னான்.
உடனே அந்த நான்கு எலிகளும் "ராத்திரியும் பகலுமாக சோறு தண்ணி இல்லாம கண் விழிச்சு உன் நிலத்தை காப்பாற்றி நெல்லை களத்துக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கோம். வெறும் நன்றியோடு விட்டுட்டா எப்படி வரதா?என கேட்டன.உடனே வரதன்" நான் என்ன பண்ணனும்?என கேட்டான்.

"இங்க பாரு வரதா.. விதைத்தது நீ. அதை பாதுகாத்தது நாங்க. நீர் பாய்ச்சியது நீ. நீர் வயலை விட்டு வெளியில போகாம பாத்துக்கிட்டது நாங்க. வீணாக யூரியாவை போட்டு நிலத்துல புல்லை வளர்த்தது நீ. தினம் தினம் இரவு நேரங்களில் புலியை கூட்டிட்டு வந்து புற்களை மேய வைத்து வயலை பாதுகாத்தது நாங்கள்" "என்னாது புலி புற்களை தின்றதா?"

"ஆமாம் இதெல்லாம் இரவு நேரங்களில் நடந்தவை. நீ தூங்கிய பிறகு இவ்வளவு வேலைகளை உன் வயலுக்காக நாங்கள் செய்திருக்கிறோம். எனவே இப்போது விளைந்து இருக்கின்ற நெல்லில் சரிபாதியை எங்களுக்கு கொடுத்தாக வேண்டும்" என டை போட்ட தங்களது மீசையை முறுக்கியப்படி கறாராக கண்டிஷன் போட்டு நான்கு எலிகளும் ஒற்றைக்காலில் நின்றன. அது மட்டும் இல்லாமல் தங்களுக்காக பஞ்சாயத்து பேச ஊர் நாட்டாமை, தலைவரையும் கூட்டிட்டு வந்திருந்தன அந்த எலிகள்.

வரதனுக்கு வேற வழியே தெரியவில்லை. விளைஞ்ச நெல்லில் பாதியை அந்த எலிகளுக்கு படியளந்து அனுப்பி வைத்தான். மூட்டைகளை தூக்கிக் கொண்டு போன அந்த எலிகள், போன சிறிது நேரத்திலேயே மூட்டைகளோடு திரும்பி வந்தன. கூடவே வழக்கப்படி நாட்டாமையும் ஊர் தலைவரும் வந்திருந்தார்கள். அந்த எலிகளை பார்த்து என்ன என்று கேட்டான் முட்டாள் வரதன்.

அதற்கு அந்த எலிகள்" என்ன வரதா.. இந்த மாதிரி துரோகம் பண்ணிட்ட? நீ எகொடுத்த நெல்லு முழுக்க வெறும் உமியா இருக்கு. நீயே பாரு"என கொண்டு வந்த நெல் மூட்டைகளை அவிழ்த்து கொட்டின. அத்தனையும் உமி.

வரதனை ஏமாற்றி மீதமிருக்கும் நெற்களையும் அபகரிக்க வயலை காவல் காப்பதாக கூறி, நெல்மணிகளை கொரித்து கொரித்து மிச்சமான உமிகளை சேர்த்து வைத்திருந்த இடத்திலிருந்து மூட்டை கட்டி வந்திருந்தன அந்த எலிகள்.இதை அறியாத வரதனுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. தான் கொடுத்து அனுப்பியது அத்தனையும் நெல்மணிகள் தானே? நெல்மணிகள் எப்படி உமியாகும்? என்று குழம்பிப் போனான்.

கூட வந்த நாட்டாமைக்காரர்,தலைவரும் எலியோட களவாணிதனத்துக்கு உடந்தை. "என்ன வரதா..உன் நிலத்திற்கு இந்த எலிகள் தானே பாதுகாப்பா இருந்திருக்கு? அதுங்களுக்கு போய் கூலியா உமியை கொடுக்கலாமா? நன்றி கெட்டத்தனமாக இருக்கே? என ஊர் நாட்டாமையும் தலைவரும் எலிகளுக்கு வக்காலத்து வாங்கினார்கள்.

உடனே,"இப்ப என்ன வேணும் என்கிறீர்கள்? நான் கொடுத்ததெல்லாம் நெல்லு தான். எப்படி உமியாச்சுன்னு எனக்கு தெரியாது"என்றான்அந்த முட்டாள் வரதன். அதற்கு அந்த நாட்டாமை, " அதை பத்தி இப்ப பேச வேண்டாம். பாவம் அந்த எலிகள் ராப்பகலா உழைச்சு இருக்குங்க. அதுங்களுக்கு சேர வேண்டிய கூலியை ஒழுங்கா குடுத்துடு. ஆமாம் வரதா..விளைச்சலில்பாதியை எலிகளுக்கு கொடுக்கணும்"ன்னு நாட்டாமை தீர்ப்பு சொல்லிட்டார்.

வரதனுக்கு வேற வழியே தெரியவில்லை. குவிச்சு வைத்திருந்த மீதி பாதி நெல் குவியலில் இருந்து பாதியை அந்த எலிகளுக்கு மூட்டை கட்டி அனுப்பி வைத்தான் முட்டாள் வரதன். எலிகளும் விசிலடித்தப்படி அந்த மூட்டைகளை தூக்கிக் கொண்டு இன்னொரு வரதனை தேடி ஏமாற்ற புறப்பட்டன.

நண்பர்களே!நமது வயலில் விளையும் பயிர்களுக்கு நாம் தான் பாதுகாப்பு.நம்பகம் இல்லாத யாரையோ, அவர்களது பசப்பு வார்த்தையை நம்பி காவலுக்கு வைத்தால் வரதனுக்கு ஏற்பட்ட நிலைதான் நமக்கும் ஏற்படும்.

எனவே நாம் வரதனாகவும் இருக்கக் கூடாது. அந்த எலிகளாகவும் இருக்கக் கூடாது. ஆனாலும் நாம் வரதனாக இல்லாவிட்டாலும் கூட , நம்முடனும் இந்தக் கதையில் வரும் எலிகளை போல நமக்கும் தெரியாமல் நம்மோடு பலர் இருப்பார்கள்.அவர்களை அடையாளம் கண்டு கொண்டு, நம் நிலத்தை பாதுகாத்து கொள்வதுடன், நாமும் பாதுகாப்பாக இருப்போம்!''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+