“திண்டாடும்” திருச்சி.. சென்னை, கோவை, மதுரைக்கு மட்டும்தானா? பட்ஜெட்டால் கடுப்பான மலைக்கோட்டை மக்கள்
கோவை, மதுரைக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டங்களைபோல் திருச்சியின் வளர்ச்சிக்காக சிறப்பு திட்டத்தை அறிவிக்காதது ஏன் என மக்கள் கேள்வி
சென்னை: சிங்கார சென்னை திட்டம்போல் கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்கள் தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மற்றொரு பெரிய நகரமான திருச்சி இந்த பட்டியலில் இடம்பெறாததற்கு ட்விட்டரில் விமர்சனங்கள் எழுந்து உள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் சட்டசபையில் தெடங்கி நடைபெற்று வருகிறது. 2023 - 2024 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
அதில் நகர்புற வளர்ச்சித் துறை சார்பில் சென்னை, மதுரை, கோவை ஆகிய பெருநகரங்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை திருச்சிக்கு அளிக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி உள்ளனர்.

கோவை, மதுரைக்கு திட்டங்கள்
இன்று பிடிஆர் தாக்கல் செய்த பட்ஜெட்டில், "சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரங்களான கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் திட்டமிட்ட வளர்ச்சியை மேற்கொள்வது இன்றியமையாதது ஆகும். ஆகவே இந்த 2 நகரங்களையும் அதனை சுற்றி உள்ள பகுதிகளையும் உள்ளடக்கிய அனைத்து மக்களின் பங்களிப்புடன் எழில்மிகு கோவை மற்றும் மாமதுரை என்ற ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்படும்.

வளர்ச்சித் திட்டங்கள்
பசுமையான பூங்காக்கள், தூய்மையான தெருக்கள், அனைவருக்கும் சுத்தமான குடிநீர், பாதுகாப்பான போக்குவரத்து அமைப்புகள், தொழிற் பூங்காக்கள், தரமான வீட்டு வசதி போன்றவைகள் இத்திட்டங்களின் கீழ் இடம்பெறும். தலா ஒரு கோடி ரூபாய் செலவில் இத்திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்." என்றார்.

எப்படி இருந்த திருச்சி?
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு காலத்தில் தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக கருதப்பட்டது திருச்சி. அதற்கு பிறகுதான் மதுரை, கோவை என்று சொல்வார்கள். ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தபோது கோவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக கூறப்பட்டது.

கோவையின் வளர்ச்சி
தற்போது திமுக ஆட்சியிலும் லூலூ மால் என பல்வேறு திட்டங்கள் கோவைக்கு கொண்டு வரப்பட உள்ளன. விரைவில் ஜவுளி பூங்காவும் தொடங்கப்பட உள்ளது. சென்னைக்கே போட்டிபோடும் அளவுக்கு கோவையின் வளர்ச்சி அபரிமிதமாக மாறி இருக்கிறது. அதே நேரம் திருச்சி எந்த முன்னேற்றமும் அடையவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள் மக்கள்.

தரம் குறைந்ததா?
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட மக்களாலும் எளிதில் வந்து செல்லும் நகரமான திருச்சியை ஒரு காலத்தில் தலைநகரமாக்க வேண்டும் என்றெல்லாம் பேசி வந்தார்கள். ஆனால், தற்போது அது மற்ற சிறிய நகரங்களை போன்று தரம் குறைந்து விட்டதாக கூறுகிறார்கள் மலைக்கோட்டை வாழ் மக்கள்.

திண்டாடும் திருச்சி
குறிப்பாக இன்று கோவை, மதுரைக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டங்களைபோல் திருச்சியின் வளர்ச்சிக்காக சிறப்பு திட்டத்தை அறிவிக்காதது ஏன் என்ற கேள்வியை மக்கள் எழுப்பி வருகிறார்கள். சிங்கார சென்னை, எழில்மிகு கோவை, மாமதுரை திட்டங்களின் வரிசையில் திண்டாடும் திருச்சி என்று கூறி ட்விட்டரில் விமர்சனங்கள் எழுந்து உள்ளன.

குற்றச்சாட்டு
திருச்சியின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வரும் திருச்சி அப்டேட்ஸ் ட்விட்டர் பக்கம், "திருச்சிக்கு திண்டாடும் திருச்சி என்பதே சரியான பெயர். மாநகரத்தின் சரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளியிடாமல், திருச்சி குறைத்து மதிப்பிடப்படுகிறது. இது திருச்சி மாநகராட்சியின் தோல்வி." என்று குறிப்பிட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications