வீடுகளில் காகித வடிவில் தங்கம்! தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரம் விற்பனை! முழு விவரம்!
சென்னை: வீடுகளில் தங்கத்தை வாங்கி வைத்துக் கொண்டு பாதுகாப்பதற்கு பதில் தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரம் வாங்கி வைத்தால், அதனை அவசரத் தேவைக்கு அரசு மற்றும் தனியார் வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெறலாம் என கூறுகிறார் திருச்சி தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கிருஷ்ண மூர்த்தி.
தங்கப்பத்திரம் என்றால் என்ன அதன் பயன்கள் என்ன என்பது குறித்து திருச்சி தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கிருஷ்ண மூர்த்தி கூறியிருப்பதாவது;

''தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரம் விற்பனை நேற்று தொடங்கி, வரும் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் தங்கப்பத்திரம் விற்பனை நடைபெறுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.5,926 ஆகும்.
தனிநபர் இந்த திட்டத்தில் 1 கிராம் முதல் 4 கிலோ வரை பணம் முதலீடு செய்து பத்திரங்களை பெற்றுக்கொள்ளலாம். முதலீடு செய்துள்ள பணத்துக்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். வட்டித்தொகை 6 மாதங்களுக்கு ஒரு முறை முதலீட்டாளரின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
இதன் மூலம் வீடுகளில் தங்கம் காகித வடிவில் மட்டுமே இருக்கும்.எனவே, தங்க நகைகளை போல் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் களவு போகக்கூடிய அபாயமும் இல்லை. 8 ஆண்டுகளில் இந்த பத்திரம் முதிர்வடையும். அவசரத்தேவைக்கு தங்கப்பத்திரத்தை அரசு மற்றும் தனியார் வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற முடியும்.
இந்த பத்திரத்தை பெற பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பான்கார்டு நகல் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். மேலும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் போன்ற ஏதாவது ஒரு அடையாள அட்டை நகலும் கட்டாயம் வேண்டும்.
திருச்சி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை மற்றும் கிராமப்புற தபால் நிலையங்களிலும் இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.''












Click it and Unblock the Notifications