மின் கட்டணம் பாக்கி.. சென்னையில் இபி லைனை கட் பண்ண போன ஊழியருக்கு மறக்க முடியாத சம்பவம்
சென்னை: சென்னையை அடுத்த ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள சைக்கிள் கடையில் 6 மாத மின் கட்டண பாக்கிக்காக மின் இணைப்பை துண்டிக்க முயன்றுள்ளார் மின் ஊழியர்.. அங்கு அவருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்..
தமிழகத்தில் மின்சார கணக்கீடு என்பது ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வரும். முதல் 100 யூனிட் மின்சாரம் வீடுகளுக்கு இலவசமாக தரப்படுகிறது. அதற்கு அடுத்த 100 யூனிட் மின்சாரத்தில் இருந்து தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் 200 யூனிட்டிற்கு வரை ஒரு கட்டணமும், 300 யூனிட்டிற்கு மேல் 500 வரை ஒரு கட்டணமும் வீடுகளுக்கு வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக 101 - 200 யூனிட்களுக்கு, ஒரு யூனிட்டுக்கு 2 ரூபாய் கட்டணமும், 201 - 500 யூனிட்களுக்கு கட்டணம் 3 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2022 முதல் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. கடைகளை பொறுத்தவரை 8 ரூபாய் என்பதே தொடர்கிறது.

பொதுவாக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின் கட்டணத்தை செலுத்த அவகாசம் வழங்கப்படும். மின் கட்டணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த தவறினால் 100 ரூபாப் அபராதம் விதிப்பார்கள். அபராத தொகையுடன் மின் கட்டணத்தை சேர்த்து கட்ட வேண்டியது வரும். அபராதம் தொகையுடன் மின் கட்டணத்தை குறிப்பிட்ட சில மாதங்கள் தொடர்ந்து கட்ட தவறினால், அந்த வீட்டின் அல்லது கடையின் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டிப்பது வழக்கம்.. அப்படி போய் , அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்துவிட்டு வந்த பின்னர், மின் கட்டணத்தை செலுத்தினால், மீண்டும் மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் தந்துவிடுவார்கள்..
இந்நிலையில் அப்படி மின் இணைப்பை துண்டிக்கும் போது சில நேரங்களில் பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களை மிரட்டும் சம்பவங்கள் நடைபெறும்..ஆனால் உச்சபட்சமாக சென்னையில் மின் இணைப்பை துண்டிக்கச்சென்ற ஊழியர் தாக்கப்பட்டுள்ளார்.
சென்னை ரெட்ஹில்ஸ் ஜி.என்.டி.சாலை அருகே தமிழ்நாடு அரசின் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் 55 வயதாகும் பார்த்திபன் என்பவர் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த செவ்வாய் கிழமை மாலை ஜி.என்.டி. சாலையில் உள்ள முனியாண்டி என்பவருக்கு சொந்தமான சைக்கிள் கடைக்கு சென்றுள்ளார். முனியாண்டி 6 மாத மின் கட்டண பாக்கி வைத்திருக்கிறார். இந்தத தகவலை கூறிய மின் ஊழியர் பார்த்திபன், உடனே மின் இணைப்பை துண்டிக்க முயன்றுள்ளார்.
அப்போது முனியாண்டியும் அவரது மகன் தினேஷ் குமாரும் சேர்ந்து பார்த்திபனை சரமாரியாக தாக்கியுள்ளார்கள். இதில் பார்த்திபன் பலத்த காயம் அடைந்தார். உடனே இது குறித்து மின் வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பார்த்திபனை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பார்த்திபன் அளித்த புகாரின் பேரில், செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications