திடீர் நெஞ்சுவலியா? டிடிவி தினகரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி.. என்ன காரணம்?
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீரென்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அதன்பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில் அதுபற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக இருப்பவர் டிடிவி தினகரன். தற்போது பாஜக கூட்டணியில் உள்ளார். டிடிவி தினகரன் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். மேலும் அடிக்கடி மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் சென்று வருகிறார்.

தற்போது தமிழக பாஜகவில் மாநில தலைவர் அண்ணாமலையின் மாற்றம், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான விவாதம் என்பது பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விவாதிக்க சென்னைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு வந்தார்.
சென்னை வந்துள்ள அமித்ஷா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களை அமித்ஷா சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி கூட்டணியில் உள்ள டிடிவி தினகரன், இன்று அமித்ஷாவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது டிடிவி தினகரன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டிடிவி தினகரன் நேற்று சென்னையில் தனது குடும்பத்துடன் இருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதையடுத்து உடனடியாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவின. மேலும் டிடிவி தினகரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் மருத்துவமனை சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டது.
இதற்கிடையே தான் தற்போது முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது டிடிவி தினகரன் மருத்துவ பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த மாதிரியான பரிசோதனை என்பது பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications