பழைய ஓய்வூதிய திட்டம்.. வருமா வராதா? ஒவ்வொரு வாட்டியும் பேச்சு மட்டும்தான்.. வந்து விழுந்த கேள்வி!
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளை கடந்த பின்பும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த மறுப்பது ஏன் என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது அமலில் இருக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நீக்கிவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி அவ்வப்போது போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தலுக்கு முன்பாக, திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் அண்மையில் சட்டசபையில் இதுதொடர்பான கோரிக்கைக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆராய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஓய்வூதிய ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறது என தெரிவித்தார். இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு தயாராக இல்லை என விமர்சித்துள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது அரசின் கொள்கை முடிவு எனவும், அது தொடர்பாக பெறப்பட்ட ஆய்வு அறிக்கைகள் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் கூறியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு சட்டமன்றக் கூட்டத்தொடரிலும் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக கேள்விகள் எழுவதும், அதற்கு எவ்வித முன்னேற்றமும் இல்லாத வகையில் அமைச்சர் அவர்கள் பதிலுரை வழங்குவதும் தொடர்கதையாகி வருவது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அரசு தயாராக இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளை கடந்த பின்னரும் வாக்குறுதியை நிறைவேற்ற முன்வராதது ஏன்?
சத்தீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கு முன்பாக வழங்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுவது எட்டாக் கனியாகவே இருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான கொள்கை முடிவை உடனடியாக வெளியிட தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications