திமுகவுக்கு டிடிவி தினகரன் சவாலா? ஸ்டாலின் சொன்ன பதில்
Recommended Video

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின், தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த வி.பி.கலைராஜன் திருச்சியில் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதன்பிறகு நிருபர்களுக்கு ஸ்டாலின் பேட்டியளித்தார்.
அப்போது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து, முன்பு செந்தில் பாலாஜி வந்திருந்தார். இப்போது கலைராஜன் திமுகவுக்கு வந்துள்ளார். அதிமுகவை விட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் திமுகவுக்கு சவாலாக இருக்குமா, என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஸ்டாலின், நாங்கள் யாரையும் சவாலாக கருதவில்லை. எங்களுடைய பிரச்சினைகள் சவால்கள் எல்லாம் மத்தியில் இருக்கக்கூடிய பாசிச ஆட்சி, மாநிலத்தில் இருக்கக்கூடிய எடுபிடி ஆட்சிகளை அழிக்க வேண்டும் என்பதுதான். இதைத்தான்மிகவும் சவாலாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
நிச்சயமாக அரசியல் கட்சிகளை விட அந்த பணியை நிறைவேற்ற மக்கள்தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டிருக்கிறோம்.
சகோதரர் கலைராஜன், ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவரணியில் பணியாற்றியவர்தான். ஏதோ புதிதாக வந்தவர் கிடையாது. ஏற்கனவே விட்ட பணியை தொடர்ந்து நடத்த வந்து சேர்ந்திருக்கிறார். இவரை மனப்பூர்வமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருக வருக என்று வரவேற்கிறேன்.
அவர் மட்டுமல்ல இன்னும், பல கட்சிகளில் இருந்து வருவதற்கு சூழ்நிலை உருவாகியிருக்கிறது. காரணம், மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியையும், மாநிலத்தில் நடைபெறக்கூடிய ஆட்சியையும், அகற்றுவதற்கு திராணியுள்ள கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் தான், என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்திருக்கிறது. அந்த உணர்வோடு வந்துள்ள அவர்களை நாம் மனப்பூர்வமாக மீண்டும் வரவேற்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications