டிஜிபி ஒன்னு சொல்றாரு, அமைச்சர் இன்னொன்று சொல்றாரு.. தமிழகத்தில் என்னதான் நடக்குது.. டிடிவி சுளீர்
சென்னை: நாளை இரவு 12 மணிக்கு மேல் சென்னையில் வாகனப் போக்குவரத்திற்கு டிஜிபி தடை விதிக்கிறார், அதே நாளில் இரவு 12 மணிக்கு மேல் கோயில்களில் மக்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என அறநிலையத் துறை அமைச்சர் சொல்கிறார். இப்படி ஆளாளுக்கு ஒன்று பேசுகிறார்களே தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் ஓமிக்ரான் சமூக பரவலாகிவிட்டதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் சென்னையில் ஓமிக்ரான் அதிகம் பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் 45 பேருக்கு ஓமிக்ரான் பரவல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஓமிக்ரான் பரவல் அதிகமாக உள்ளதால் அந்தந்த மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம்
அது போல் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை இரவு 12 மணிக்கு மேல் வாகன போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் அத்தியாவசிய காரணமாக இருந்தால் மட்டுமே வெளியே வர வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

சுவாமி தரிசனம்
இதனால் கோயில்களில் புத்தாண்டு அன்று சுவாமி தரிசனத்திற்கு ஏதேனும் தடை விதிக்கப்படுமா என மக்கள் சந்தேகம் தெரிவித்தனர். இதையடுத்து கோயில்களில் சுவாமி தரிசனத்திற்கு எந்த தடையும் இல்லை. நாளை நள்ளிரவு 12 மணிக்கு மேல் கோயில்களுக்கு செல்லலாம் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். தமிழக டிஜிபி வாகன போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளார். ஆனால் அமைச்சரோ கோயில்களுக்கு செல்லலாம் என கூறியுள்ளார்.

கோயில்களில் அனுமதி
அருகில் உள்ள கோயில்களுக்கு நடந்து செல்லலாம். தூரத்தில் இருக்கும் கோயில்களுக்கு இரு சக்கர வாகனத்தில்தான் செல்ல வேண்டும். எனவே இருவரது அறிவிப்புகளும் முரண்பாடாக உள்ளதாக மக்கள் கருதுகிறார்கள். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நாளை (31.12.2021) இரவு 12.00 மணிக்கு மேல் சென்னையில் வாகனப் போக்குவரத்திற்கு டி.ஜி.பி தடை விதிக்கிறார்.

நிதியமைச்சர்
அதே நாளில் நள்ளிரவு 12.00 மணிக்கு மேல் கோயில்களில் மக்கள் தரிசனம் செய்யலாம் என அறநிலையத்துறை அமைச்சர் சொல்கிறார். இன்னொரு பக்கம் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர முடியாது என்கிறார் தமிழக நிதியமைச்சர் ; நிதியமைச்சர் கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என்கிறார் ஆளும் தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழுத்தலைவர்!

என்னதான் நடக்கிறது
தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது? குளறுபடிகளின் உச்சமாக இருந்த பழனிசாமி கம்பெனியின் நிர்வாகத்திற்கும் இப்போதைய ஸ்டாலின் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசமில்லை! என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications