“இனிமேல் ‘முகமூடியார்’ பழனிசாமி என்று அழைக்க வேண்டும்.. இப்படி வர என்ன அவசியம்?”: டிடிவி தினகரன்
சென்னை: "எடப்பாடி பழனிசாமியை இன்று முதல் முகமூடியார் பழனிசாமி என்றுதான் அழைக்க வேண்டும்" என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமித்ஷாவை சந்தித்துவிட்டு வரும்போது முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு எடப்பாடி பழனிசாமி வந்தது குறித்து டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. ஆட்சியை மீண்டும் பிடித்துவிடுவோம் என்று உறுதியோடு நிற்கிறது திமுக. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் சிக்கல் இன்னும் தீரவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஓபிஎஸ். அதேபோல, எங்களுக்கு துரோகம் செய்த இபிஎஸ் இருக்கும் பக்கம் தப்பித் தவறியும் இருக்க மாட்டோம் என கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டார் டிடிவி தினகரன்.

இந்தச் சூழலில்தான், கொங்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார். பிரிந்து சென்ற எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோஷத்தை வலுவாக முன்வைத்தார். சசிகலாவும், அதிமுகவை நிச்சயமாக ஒன்றிணைப்பேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். அதேசமயம், துரோகிகளுக்கு கட்சியில் மீண்டும் இடமில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறி வருகிறார்.
உறுதியான கூட்டணியோடு, தெளிவான வியூகத்தோடு இறங்கினால் மட்டுமே அதிமுகவால், திமுக கூட்டணியை பலத்தோடு எதிர்க்கவே முடியும், எனவே அதிமுக ஒருங்கிணைப்பு அவசியம் என பாஜக தலைமை கருதுவதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அமித் ஷாவை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, பத்திரிகையாளர்களை சந்திக்காமல் காரில் கைக்குட்டையால் முகத்தை மூடியபடி சென்றது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. முக்கியமாக, செங்கோட்டையன், ஓபிஎஸ் போன்றோரை இனி சந்திக்க வேண்டாம் என அமித் ஷாவிடம் இபிஎஸ் கோரிக்கை வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எதற்காக எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடியபடி சென்றார் என்பது தற்போது பெரும் விவாதம் ஆகியுள்ளது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். டிடிவி தினகரன் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "தேர்தல் வெற்றியை விட, ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம் என பேசினார் எடப்பாடி பழனிசாமி. அப்படி வீரவசனம் எல்லாம் பேசிய எடப்பாடி பழனிசாமி, இப்போது அமித் ஷாவை சந்தித்துள்ளார். உள்துறை அமைச்சரை, கூட்டணி கட்சித் தலைவரை பார்த்துவிட்டு வெளியே வரும்போது எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடி வர வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? இன்று முதல் எடப்பாடி, முகமூடியார் பழனிசாமி என அழைக்கப்படுவார்" எனக் கூறியுள்ளார்.
மேலும், "எடப்பாடி பழனிசாமி அடிக்கும் கூத்துக்களை எல்லாம் ராஜதந்திரம் என கூறி கொண்டிருந்தனர். யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள். யார் இப்படி முகத்தை மூடிக்கொண்டு வருவார்கள் என உங்களுக்குத் தெரியும். எடப்பாடி பழனிசாமி பக்கத்தில் இருப்பது அவரது அன்பு மகன் என ஊடகங்களில் செய்தி வெளியானது. உடன் சென்ற மற்றவர்களை எல்லாம் முதலில் அனுப்பி விட்டு அப்புறம் வந்துள்ளார். அதற்கு என்ன காரணம் என அவர்தான் சொல்ல வேண்டும். அதிமுக தொண்டர்கள் இனிமேலும் தங்களை தாங்களே ஏமாற்றி கொள்ள வேண்டாம். இரட்டை இலையை வைத்துக்கொண்டு அ.தி.மு.க தொண்டர்களை ஏமாற்றுகிறார் இபிஎஸ்." எனத் தெரிவித்துள்ளார் தினகரன்.












Click it and Unblock the Notifications