அதிமுகவால் பரம எதிரியாக பார்க்கப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ்! தென் தமிழகத்தில் அபாரம்!
சென்னை: தேனியிலும் ராமநாதபுரத்திலும் டிடிவி தினகரனும் ஓபிஎஸ்ஸும் அதிமுகவை பின்னுக்குத் தள்ளியுள்ளனர். இந்த இரு தொகுதிகளை பொருத்தமட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுச் செயலாளராக இருந்தவரும் முதல்வருமான ஜெயலலிதா மறைந்தவுடன் சசிகலா முதல்வராக ஆயத்தமானார். இதைத் தொடர்ந்து அவர் சிறைக்கு சென்றார். பின்னர் அதிமுகவினர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்தனர்.

ஆனால் ஓபிஎஸ்ஸோ சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்துவிட்டார்கள் என்றும் அவருடைய மரணத்திற்கு ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதனால் ஓபிஎஸ் 10 எம்எல்ஏக்களுடன் தனி அணியாக செயல்பட்டு வந்தார்.
இதையடுத்து இரட்டை இலை முடங்கும் நிலை ஏற்பட்டதால் அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைய முடிவு செய்தன. அப்போது ஓபிஎஸ் ஒரு கண்டிஷன் வைத்தார், அதில் சசிகலா, டிடிவி தினகரன், அவர்களுடைய குடும்பத்தினரை கட்சியில் சேர்க்க கூடாது என்பதுதான் அந்த கண்டிஷன்.
இந்த கண்டிஷனுக்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டார். பிறகு சசிகலா வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியை நீக்கிவிட்டு அதற்கு இணையான அதிகாரம் கொண்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரு பதவிகள் உருவாக்கப்பட்டு முறையே ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதவி வகித்தனர். டிடிவி தினகரனும் அமமுக என்ற கட்சியை தொடங்கினார்.
இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே எடப்பாடிக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் பனிப்போர் நடந்தது. அது போல் திமுக ஆட்சி அமைத்ததும் சட்டசபையில் கருணாநிதியை ஓபிஎஸ் புகழ்ந்தார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது அதிமுக நிர்வாகிகளால் வைக்கப்பட்டது.
இது பிறகு 2022 ஆம் ஆண்டு வெடித்தது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை என்ற பேச்சு எழுந்தது. அதனால் இரு தரப்பும் கோர்ட்டுக்கு போய் கடைசியில் அதிமுக எடப்பாடி பழனிசாமிக்குத்தான் என தீர்ப்பாகிவிட்டது. இதனிடையே ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதன் பிறகும் அவர் போராடிய நிலையில் தோல்வியையே சந்தித்தார்.
ஓபிஎஸ்ஸுடன் இருந்த நிர்வாகிகளை அதிமுகவுக்கு வந்துவிடுமாறு அழைப்பு விடுத்த போதிலும் ஓபிஎஸ் மட்டும் வரவேக் கூடாது என அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கண்டிப்பாக இருந்தனர். இதையடுத்து அதிமுக உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கினார். தற்போது ராமநாதபுரத்தில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார்.
அங்கு திமுக கூட்டணி கட்சியின் ஐயூஎம்எல் வேட்பாளர் நவாஸ் கனி 1,22,140 வாக்குகளை பெற்றுள்ளார். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸோ சுயேச்சையாக போட்டியிட்டு 64,566 வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் அதிமுக வேட்பாளரோ இரட்டை இலையில் போட்டியிட்டு ஜெயபெருமாள் 28364 வாக்குகளையும் பெற்று சுயேச்சையை விட பின்னடைவை சந்தித்து வருகிறார்.
அது போல் தினகரனை கட்சியில் சேர்க்கவே கூடாது என சொன்ன ஓபிஎஸ், அண்மையில் தினகரனை சந்தித்தார். இவர் தொகுதிக்கு அவரும் அவர் தொகுதிக்கு இவரும் தேர்தல் பிரச்சாரம் செய்தனர். தினகரன் பாஜக கூட்டணியில் இணைந்து இரு தொகுதிகளை பெற்றார். ஒன்று தேனி,மற்றொன்று திருச்சி.
இதில் தேனியில் திமுக சார்பில் தங்கதமிழ்ச் செல்வனும் அதிமுக சார்பில் நாராயணசாமியும் அமமுக சார்பில் டிடிவி தினகரனும் போட்டியிட்டனர். இதில் தங்கதமிழ்ச் செல்வன் 1,23,813 வாக்குகளையும் டிடிவி தினகரன் 57,328 வாக்குகளையும் நாராயணசாமி 32269 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை பெற்ற அதிமுக, கடந்த 2019ஆம் ஆண்டு வெறும் ஒரு தொகுதியில் மட்டும் வென்றது. அதே போல் 2021 ஆம் ஆண்டும் ஆட்சியை தவறவிட்டுவிட்டது. இந்த நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கூட 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்ட போதிலும் எந்த தொகுதியிலுமே முன்னிலை வகிக்கவில்லை.
ஆனால் ராமநாதபுரத்தில் ஓபிஎஸ்ஸின் பெயரை வைத்து குழப்புவதற்காகவே 5 ஒபிஎஸ்களை அனுப்பியதாக சொல்லப்பட்ட போதிலும் ரியல் ஓபிஎஸ் அதிமுகவை 3ஆவது இடத்திற்கு தள்ளியுள்ளார். அது போல் டிடிவி தினகரனும் தேனியில் அதிமுக வேட்பாளரை பின்னுக்கு தள்ளிவிட்டு 2ஆவது இடத்தில் உள்ளார். ஓபிஎஸ்ஸையும் டிடிவி தினகரனையும் அதிமுகவினர் எதிரியாக பார்த்த போதிலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் நன்றாகவே பெர்ஃபார்ம் செய்துள்ளனர் என்றே சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications