பொசுக்குன்னு கிளம்பிய பச்சை மால்.. பொளேர் பதிலடி கொடுத்த தினகரன்.. புது பொறுப்புக் குழு ரெடி!
சென்னை: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்கு 5 பேர் கொண்ட பொறுப்புக்குழுவை அறிவித்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
பொறுப்புக்குழுவுக்கு மாணிக்கராஜாவை தலைவராக நியமித்திருக்கும் தினகரன், அவரது தலைமையில் அந்த குழு உறுப்பினர்கள் செயல்படுவார்கள் எனக் கூறியுள்ளார்.
மேலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து பச்சைமால் விடுவிக்கப்படுவதாக தினகரன் அறிவித்துள்ளார்.

அதிரடி பதிலடி
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பச்சைமால் அதிமுகவில் சேர உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே முந்திக்கொண்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் தினகரன். கட்சியில் இருந்து பச்சைமால் விலகுவதற்கு முன்பே உஷாராக அவரிடம் இருந்து பதவியை பறித்ததன் மூலம் அமமுக மாவட்டச் செயலாளர் அதிமுகவில் இணைந்தார் என்ற செய்தியை தவிர்த்துள்ளார் டிடிவி.

பொறுப்புக்குழு
லெட்சுமணன், இமாம் பாதுஷா, செல்வம், நவமணி, செந்தில்முருகன் ஆகியோர் தான் குமரி கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் 5 பேரையும் டிடிவி தினகரனால் தென்மண்டல தளபதி என அழைக்கப்படும் மாணிக்கராஜா வழிநடத்துவார்.

தாமதமின்றி
கடந்த ஒரு வாரகாலமாக தஞ்சை, திருச்சி, மதுரை என சுற்றுப்பயணத்தில் இருந்த தினகரன் இன்று தான் சென்னை வந்து சேர்ந்தார். இதனிடையே பச்சைமால் இடத்தை நிரப்புவது தொடர்பாக நேற்றே மாணிக்கராஜாவுடன் கலந்து பேசி ஆட்களை தயார் செய்துவிட்டாராம். இன்று அவர் சென்னை வந்து சேர்ந்ததும் அறிவிப்பை வெளியிடுமாறு கட்சி அலுவலகத்திற்கு தெரிவித்துள்ளார்.

சோர்வின்றி
அமமுகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவதும், விலகுவதும் தொடர் கதையாகி உள்ள நிலையில் எதற்கு தாம் அசரவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தினகரன் தொடர்ந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications