அதிகார துஷ்பிரயோகம்.. அத்துமீறி தாக்குதல்.. கள்ள ஓட்டு போட முயற்சி.. டிடிவி தினகரன் பரபர அறிக்கை
சென்னை: கள்ள ஓட்டு போடவந்த பாமகவினரை தட்டி கேட்ட அமமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள டிடிவி தினகரன், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இன்று தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. மேலும், சில இடங்களில் கள்ள ஓட்டுகள் போடும் முயற்சிகளும் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெமிலி பேரூராட்சி வாக்குச்சாவடி எண் 221 மற்றும் 223-ல் சிலர் கள்ள ஓட்டுகளைப் போட முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த வாக்குச்சாவடிகளில் அரசியல் கட்சியினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோளிங்கர் நெமிலி பேரூராட்சி ஓட்டுப் போட வந்த பா.ம.க.வினரை அமமுக வாக்குச்சாவடி முகவர்கள் தட்டிக் கேட்டனர். அப்போது அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணெதிரே கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபற்றி அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுங்கட்சியினருக்குச் சாதகமாக மவுனம் காத்து வருகின்றனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு அமமுக வேட்பாளருடன் வந்த கார்கள் மீதும் பா.ம.க.வினர் தாக்குதல் நடத்தியதியுள்ளனர். இதைத் தடுக்கவும் காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளும் வர்க்கத்தின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தைத் தேர்தல் ஆணையம் இனியும் வேடிக்கை பார்க்காமல் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.