அத்தனை பேரும் அதிமுகவுக்கு ரிட்டர்ன்.. சட்டசபையில் தனி மரமானார் தினகரன்!!
Recommended Video
சென்னை: சட்டசபையில் கிட்டத்தட்ட தனி மரமாக மாறியுள்ளார் அமமுக தலைவர் தினகரன். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அத்தனை பேரும் அதிமுகவுக்குத் திரும்பி விட்டனர்.
மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக அரசியல் அரங்கில் வலம் வந்தவர் தினகரன். இன்று இருந்த ஆதரவையும் இழந்து நிர்க்கதியாகியுள்ளார். தினகரனை நம்பிப் போன 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது கூட தினகரனுக்கு பெரிய சரிவு ஏற்படவில்லை.
ஆனால் இந்த 17 பேரும் பெரிதாக நம்பியிருந்த சட்டசபை இடைத் தேர்தல் அவர்களை மிகப் பெரிய அளவில் ஏமாற்றி விட்டது. ஒருவர் கூட ஜெயிக்கவில்லை. மாறாக அதிமுக 9 தொகுதிகளில் வென்றது. லோக்சபா தேர்தலிலும் அமமுக மிகப் பெரிய படு தோல்வியைச் சந்தித்தது.

3 பேரும் போயாச்சு
அமமுகவுக்குள் வராமலேயே அவருக்கு ஆதரவாக சில எம்எல்ஏக்கள் செயல்பட்டு வந்தனர். பிரபு, கலைச்செல்வன் மற்றும் ரத்தினசபாபதி. கருணாஸ் கூட மறைமுகமாக ஆதரவாகத்தான் இருந்தார். ஆனால் இன்று இவர்களும் கூட தினகரனை கைவிட்டுள்ளனர். இன்று 123 எம்எல்ஏக்களுடன் கம்பீரமாக காட்சி தருகிறது அதிமுக.

இன்று கலைச்செல்வன்
நேற்று ரத்தினசபாபதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தொடர்ந்து அதிமுகவிலேயே தீவிரமாக ஈடுபடப் போவதாக தெரிவித்து சமரசம் ஆகி விட்டார். இன்று கலைச்செல்வன் சந்தித்து விட்டார். பிரபு ஏற்கனவே தான் முதல்வருக்கு ஆதரவாகவே செயல்படுவேன் என்று கூறி விட்டார். ஆக, இருந்த சில எம்எல்ஏக்களின் ஆதரவையும் இன்று தினகரன் இழந்துள்ளார்.

ஒருவர் கூட இல்லை
சட்டசபையைப் பொறுத்தவரை இப்போது தினகரனுக்கு ஆதரவாக ஒரு அதிமுக எம்எல்ஏ கூட இல்லை. திமுகவும் கூட அவரை எந்த அளவுக்கு ஆதரிக்கும் என்றும் தெரியவில்லை. காரணம், தினகரனால் இருந்த அதிருப்தியாளர்களையும் தக்க வைக்க முடியவில்லை. புதிதாக யாரையும் அவரால் இழுக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே திமுகவும் கூட தினகரனை கண்டுக்காது.

மாயாஜாலம் நடந்தால்தான்
அதிமுகவுக்கு மட்டுமல்லாமல் திமுகவுக்கே பெரும் அச்சுறுத்தலாக வலம் வந்த தினகரன் இன்று தனி மரமாக, சிங்கிளாக மாறி நிற்கிறார். ஏதாவது மாயாஜாலம் நடந்தால் மட்டுமே தினகரனுக்கு மீண்டும் மவுசு கூடும். அதை எப்படி அவர் நிகழ்த்தப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications