சர்கார் திரைப்படத்தில் நடுநிலை இல்லை.. தினகரனும் கோதாவில் குதித்தார்!
Recommended Video
சென்னை : சர்கார் திரைப்படத்தில் நடுநிலைத்தன்மை இல்லை என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா படம் போட்ட இலவசப் பொருட்களை எரிப்பது போல காட்சியமைத்தவர்கள் இலவசமாக கொடுக்கப்பட்ட வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியையும் எரித்திருந்தால் நடுநிலையான மக்களுக்கு கருத்து சொல்லும் படம் என்று கருதி இருக்க முடியும் என்றும் தினகரன் கூறியுள்ளார்.
சர்கார் திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்திற்கு கோமளவள்ளி என வைக்கப்பட்டுள்ள பெயர் ஜெயலலிதாவையே குறிப்பதாக சர்ச்சை கிளம்பியது. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் கூறியதாவது, "எங்கள் கட்சியினர் அமமுக பொதுச்செயலாளர் சசிகலாவை பார்த்து 6, 7 மாதங்கள் ஆகின்றன. அவர்கள் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் நாங்கள் 10 பேர் சென்று சிறையில் பொதுச்செயலாளரை சந்தித்து விட்டு அவரின் உடல்நலன் விசாரிக்க இருக்கிறோம்.
ஜெயலலிதா பெயரில்லை
சர்கார் படத்தை நான் பார்க்கவில்லை, கோமளவள்ளி என்பது ஜெயலலிதாவின் பெயரே அல்ல. 2003ல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் ஜெயலலிதாவை கோமளவள்ளி என்று சொன்ன போது கூட என்னுடைய பெயர் கோமளவள்ளி இல்லை, பிறகு ஏன் என்னை அப்படி அழைக்கிறார்கள் என்று கேட்டிருக்கிறார். பழைய படங்களில் நான் கோமளவள்ளி என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கவில்லை, புதிய திரைப்படங்கள் எதிலாவது அப்படியான ஒரு கதாபாத்திரம் இருக்கிறதா என்று அப்போதே ஜெயலலிதா கேட்டிருந்தார்.
வியாபார நோக்கத்திற்காக
கோமளவள்ளி என்பது ஜெயலலிதாவின் பெயரே அல்ல, இந்த திரைப்படம் எப்படியாவது ஓடிவிட வேண்டும் என்பதற்காக புதிது புதிதான விஷயங்களை கிளப்பி விடுகின்றனர். இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் யார், இயக்குனர் யார், விஜய் யார் என்று எல்லோருக்குமே தெரியும்.
நடுநிலை திரைப்படமல்ல
ஒரே ஒரு விஷயம் எதிர்க்க வேண்டும் என்றால் படத்தில் ஒரு காட்சியில் இலவச பொருட்களை எரிப்பதைப் போல காட்டியுள்ளனர். அதில் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றிருக்கிறது, உண்மையிலேயே இலவசங்களை எதிர்க்க வேண்டும் என்றால் 2011 தேர்தலில் இலவசங்கள் அறிவிக்கப்பட்ட போது எதிர்த்திருக்க வேண்டியது தானே. மக்கள் விரும்பி வாங்கிக் கொண்டார்கள், இலவசங்களை எரிப்பதைப் போல காட்டினால் இலவச தொலைக்காட்சியையும் அதில் ஒட்டிஇருந்த புகைப்படத்தையும் எரிப்பது போல காட்டி இருக்க வேண்டியது தானே. அப்படி செய்திருந்தால் நடுநிலையாக எடுக்கப்பட்ட திரைப்படம் என்று சொல்லலாம்.
மக்களுக்கான படம் அல்ல
இவர்கள் மக்களுக்கு நல்ல தகவல் சொல்ல வேண்டும் என்பதற்காக திரைப்படம் எடுக்கவில்லை, வியாபார நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட திரைப்படம் இது. ஜெயலலிதா இருந்த போது இது போன்ற திரைப்படத்தை எடுத்திருந்தால் இவர்களை வீரர்கள் என்று சொல்லலாம், தேவையில்லாமல் இந்த பிரச்னையை பெரிதுபடுத்தி சர்கார் படத்திற்கு நானே விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை. இந்த திரைப்படத்திற்கு ஊடகங்கள் தான் விளம்பரம் தேடித் தருகின்றன என்றே நான் நினைக்கிறேன். மறைந்த தலைவர்களைப் பற்றி அவர்கள் இறந்த பிறகு விமர்சித்து படம் எடுப்பது எவ்வளவு அளவிற்கு நாகரீகமானது என்று எனக்கு தெரியவில்லை.
பணமதிப்பிழப்பால் வளர்ச்சியில்லை
பணமதிப்பிழப்பு என்பது சரியாகத் தான் இருக்கிறது, சர்வதேச சந்தையிலேயே இந்திய ரூபாயின் மதிப்பு இழந்து தான் இருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பணக்காரர்கள் முதல் ஏழை எளியவர்கள் வரை பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பணமதிப்பிழப்பு இந்திய பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் தள்ளிய செயலே தவிர வளர்ச்சிக்கான திட்டமல்ல.