அத்தனை நிபந்தனை விதித்தும்.. ஐகோர்ட் விளாசியும்.. விஜய் வருகையின்போது சுவரை சேதப்படுத்திய தவெகவினர்
நாகை: தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக தவெகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனாலும், தவெகவினர் தனியார், பொது சொத்துகளை சேதப்படுத்தும் போக்கு தொடர்கிறது. நேற்று விஜய் வருகையின்போது நாகையில் நிபந்தனைகளை மீறி தனியார் சொத்துக்கு சேதம் விளைவித்ததால் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் நேற்று மதியம் நாகப்பட்டினத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நாகையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை பட்டியலிட்ட விஜய், மக்கள் நலப்பணிகளை செய்யாத திமுக அரசையும் கடுமையாக தாக்கி பேசி இருந்தார். மேலும் சனிக்கிழமைகளில் தான் பிரசாரம் செய்வதற்கும் விளக்கம் அளித்திருந்தார்.

விஜய்யின் வருகையை எதிர்பார்த்து ஏராளமான பொதுமக்கள், தொண்டர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் குவிந்திருந்தனர். இதேபோல் அவரது முந்தைய திருச்சி பரப்புரையின்போது ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாகையிலும் இதேபோன்ற கூட்டம் எதிர்பார்க்கப்பட்டது. அதன் காரணமாக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவெக தொண்டர்களுக்கு கட்சி தலைமையால் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டன.
எனினும், விஜய் பரப்புரை வாகனத்தில் நாகை நோக்கி சென்ற நிலையில், அங்கு காத்திருந்த தொண்டர்கள் வாகனத்திற்கு முன்பு சென்று வாகனத்தை மறித்து பூக்களை தூவி கூக்குரலிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜய்யுடன் கைகொடுக்க வேண்டும், விஜய்யுடன் செல்பி எடுக்க வேண்டும் என்ற ஆசையில் பல தவெக தொண்டர்கள் அவரது வாகனத்தை ஆங்காங்கே சூழ்ந்து கொண்டனர். கட்டுக்கடங்காத கூட்டத்தால் தவெக தொண்டர்கள் சிலர் மயக்கம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாகப்பட்டினம் புத்தூர் அண்னா சிலை அருகே மாதா கோவில் திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் சாய்ந்த விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் ஏறியதில் சுவர் சாய்ந்து விழுந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நாகை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அளவுக்கு அதிகமான தொண்டர்கள், சுற்றுச்சுவரின் மீது ஏறியதில் சுவர் சேதமடைந்ததோடு, தடுப்புக் கம்பியும் சாய்ந்தது. அதில் ஒருசிலருக்கு காயம் ஏற்பட்டது. விஜய் வருகையின்போது ஏற்பட்ட இந்தச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் சொத்துக்கு சேதம் விளைவித்ததால் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை யாரும் இருசக்கர வாகங்களில் பின்தொடர வேண்டாம். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின் விளக்குக் கம்பங்கள் (EB Lamp Posts), மின் கம்பங்கள் (EB Posts), மின்மாற்றிகள் (EB Transformers). வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள், சிலைகள் ஏதேனும் இருந்தால் அதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக உயரமான இடங்களில் மேலே ஏறக்கூடாது என தவெக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
நிபந்தனைகள் தொடர்பான வழக்கில், "உயரமான இடங்களில் ஏறி நின்று அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது? தொண்டர்களை கட்சி தலைவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா? திருச்சி தவெக கூட்டத்தின்போது சேதப்படுத்திய பொது சொத்துக்களுக்கான இழப்பீட்டை வசூலிக்காவிட்டால் நீதிமன்றம் தலையிடும். பொதுச் சொத்தை சேதப்படுத்தினால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்க விதிகளை வகுக்க வேண்டும்" என ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், நேற்றும் தவெக தொண்டர்களின் செயல் அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications