ஐஐடியில் சேரும் பழங்குடியின மாணவிக்கு ரூ. 2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய தவெக விஜய்.. நெகிழ்ந்த மாணவி
சென்னை: ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஐடியில் உயர்கல்வி பயில தேர்வாகியுள்ள சேலத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்தி உள்ளார் தவெக தலைவர் விஜய்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சட்டமன்றத் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் பரிசளித்து, கௌரவித்து வருகிறார்.

அந்த வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி விருது விழா 4 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. 3 கட்ட நிகழ்வுகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இறுதிக்கட்ட நிகழ்வு இன்று நடைபெறுகிறது.
இந்த விழாவில் சேலம், திருவண்ணாமலை, தூத்துக்குடி, மதுரை, சென்னை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 39 சட்டப்பேரவை தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருது, சான்றிதழ் வழங்கி, தவெக தலைவர் விஜய் கௌரவப்படுத்தி வருகிறார்.
சேலம் மாவட்டம் கருமந்துறையில் இருந்து ஐ.ஐ.டியில் படிக்கத் தேர்வான மாணவி ராஜேஸ்வரி தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழாவில் கவுரவிக்கப்பட்டார். அவரைப் பற்றிய குறும்படம் திரையிடப்பட்ட பிறகு, தவெக தலைவர் விஜய், மாணவி ராஜேஸ்வரிக்கு 2 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து பேசிய விஜய், ராஜேஸ்வரிக்கு வாழ்த்துகளை கூறியதோடு, "வீட்டில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிச்சு சாதித்திருக்கிறார். அவருக்கு சயிண்டிஸ்ட் ஆகனும்னு ஆசை இருக்கிறது. கண்டிப்பா ஆவீங்க" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பேசிய மாணவி ராஜேஸ்வரி, "நான் மிகவும் கஷ்டப்பட்டு படித்ததை அனைவரும் பார்த்தீர்கள், நான் இந்த மேடைக்கு வருவேன் என எதிர்பார்க்கவே இல்லை. நீங்களும் என்னை போல் ஆக வேண்டுமென்றால் உங்களுக்கு உள்ள ஒரே வழி கல்வி மட்டும்தான், அதை எப்போதும் விட்டு விடாதீர்கள். விஜய் சாரை பார்க்க வேண்டும் என்பது சின்ன வயதில் இருந்து பெரிய கனவு" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கல்வி விருது விழாவில் 2026 சட்டசபை தேர்தல் குறித்து பேச வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த விஜய், தன்னை இளைய காமராஜர் என்று அழைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருந்தார்.












Click it and Unblock the Notifications