தவெக மாநாட்டில் மறையாத சோகம்.. 3 நிர்வாகிகள் பலி! நான் இருக்கேன்.. ஆறுதல் சொன்ன தலைவர் விஜய்!
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் தேதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரும் போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின் மூன்று நிர்வாகிகள் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய். மேலும் அவர்களது குடும்பத்திற்கு கட்சி துணை நிற்கும் எனவும் உறுதி அளித்துள்ளார்.
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் தனது கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை நேற்று முன் தினம் நடத்தி இருந்தார். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதமாகவே தீவிரமாக நடைபெற்று வந்தது.
மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மதுரையில் திரண்டனர், மாநாடு மாலையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதிகாலை முதலே ஏராளமானோர் அங்கு குவிய தொடங்கினர்.

தவெக மாநாடு
கடுமையான வெயில் கொளுத்திய நிலையில் தொண்டர்கள் அமர்வதற்கு நிழல் வசதி கூட இல்லை. சில இடங்களில் உரிய முறையில் குடிநீர் கழிப்பிட வசதியும் செய்து தரவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து மாநாட்டுக்கு வந்த ஏராளமான தொண்டர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். தொடர்ந்து அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மாநாட்டுக்கு வந்த சில தொண்டர்கள் கடுமையான உடல் நலக்குறைவுக்கு ஆட்பட்டனர்.
மதுரை கூட்டம்
மேலும் மாநாட்டுக்கு வரும் போதும், மாநாட்டுக்கு பின்னரும் செங்கல்பட்டையைச் சேர்ந்த பிரபாகரன், நீலகிரியைச் சேர்ந்த ரித்திக் ரோஷன், விருதுநகரை சேர்ந்த காளிராஜன் ஆகியோர் மரணம் அடைந்தனர். இந்நிலையில், தவெக மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் நிர்வாகிகள் 3 பேர் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த நிலையில், அவர்களின் மரணத்துக்கு நடிகரும் தவெக தலைவருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நிர்வாகிகள் மரணம்
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," நம் மீது தீராப் பற்று கொண்ட கழகத் தோழர்கள் செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதிக் கழக நிர்வாகி R.பிரபாகரன், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கேம்ப் லைன் K.ரித்திக் ரோஷன், விருதுநகர் மாவட்டம், இனாம் கரிசல்குளம் கிளைக் கழக நிர்வாகி K. காளிராஜ் ஆகியோர் மதுரையில் நடைபெற்ற மாநாட்டிற்கு முன்பும் பின்பும் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
விஜய் இரங்கல்
நம் கழகத்திற்கான இவர்களது பற்றுறுதியும் பங்களிப்பும் என்றென்றும் நம் நினைவில் நிற்கும். அவர்கள் விரும்பிய இலட்சிய சமுதாயத்தை நாம் படைத்துக் காட்டுவோம். கழகத் தோழர்களைப் பிரிந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆறுதல்
காலமான கழகத் தோழர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். அவர்களின் குடும்பங்களுக்கு நம் கழகம் உறுதுணையாக இருக்கும்" என கூறியுள்ளார். இந்நிலையில், மாநாட்டுக்கு வந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், தவெக தலைவர் விஜய், அவர்களது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications