புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம்
சென்னை: புதுவையில் உள்ள 30 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தவெக தலைவர் விஜய் இன்று வெளியிட்டார். இந்த நிலையில் புஸ்சி ஆனந்த் உள்பட சிலர் பணத்தை வாங்கிக் கொண்டு புதுசா வந்தவங்களுக்கு சீட் கொடுத்துள்ளதாகவும், நம்ப வைத்து ஏமாற்றிவிட்டனர் என்று கூறி தவெக நிர்வாகிகள் சிலர் தவெக நிர்வாகிகள் கட்சி ஆபிஸ் முன்பு ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் மற்றும் புதுவை சட்டசபை தேர்தலில் தனித்து களம் இறங்குகிறது. இதற்கான பணிகளில் தவெக நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். விஜய்யும் புதுவையில் வேட்பாளர்கள் யார் யார் என்பதை தேர்வு செய்ய நேர்காணல் நடத்தி இருந்தார்.

இந்த நிலையில் இன்று புதுவையில் உள்ள 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் இன்றே அவர் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இதில் தங்களுக்கு சீட் கொடுக்காமல் புதிதாக வந்தவர்களுக்கு பணத்தை வாங்கிக் கொண்டு சீட் கொடுத்துவிட்டதாக புதுவை தவெக நிர்வாகிகள் கட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்கள் கூறுகையில், "என்னப்பா செலவு எல்லாம் பார்த்துப்பியா என்று புஸ்சி ஆனந்த் அண்ணா கேட்டார். நானும் என்னால் முடிந்த அளவுக்கு பார்த்துப்பேன் என்று கூறினேன். சரி பாத்துக்கொள்ளலாம்.. யார் என்ன என்று விசாரித்து உனக்கு சீட் கொடுக்கிறேன் என்று சொன்னார். ஆனால் இன்னைக்கு எனக்கு கொடுக்காமல் புதுசா வந்தவருக்கு கொடுத்து இருக்காங்க.. நம்ப வைத்து ஏமாத்திட்டாங்க.. அவரிடம் பணம் இருக்கு.. ஆனால் மக்கள் சப்போர்ட் இருக்கா என்று தானே பார்க்க வேண்டும்.
பாஜகவில் இருந்து வந்த சாய் சரவணன் என்றால் ஒன்றுமில்லை. அவருக்கு கொடுக்கலாம். நானும் அவர்களுக்காக உழைப்போம். ஆனால் நேற்று வந்த ஒருவரை, அவர் எந்த தொகுதியில் போட்டியிட்டு இருக்கிறார். அவரும் புதுசா வந்தவர் தான்.. அவர பத்தி விசாரிச்சாங்களா.. நம்பி வந்தோம் ஏமாத்திட்டாங்க.. விஜய்யை நம்பி வந்தோம்.. தாலிய அறுத்துவிட்டாங்க..
இங்கே ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்.. நான் என் படையை வைத்து சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்யப் போகிறேன். விஜய்யை வைத்து உள்ளே இருப்பவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். விஜய் பணம் கேட்டாரா?.. அப்போ நீங்க ஏன் பணம் கேட்டு அவரு மரியாதையை கெடுக்குறீங்க.. மரியாதையோடு கட்சி துண்டு, போட்டோ எல்லாத்தையும் இங்கே வைத்து விட்டு போறோம்.." என்றனர். அப்போது சிலர் புஸ்சி ஆனந்த் ஒழிக.. புஸ்சி ஆனந்த் ஒழிக என கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உண்டானது.












Click it and Unblock the Notifications