திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக.. கூடுதல் சீட் தராததால் வேல்முருகன் அதிரடி முடிவு!
சென்னை: வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது. கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகள் ஒதுக்க திமுக மறுத்துவிட்டதால், கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சிக்கு கூடுதல் இடங்கள் கேட்டு திமுகவின் பேச்சுவார்த்தை குழுவிடம் கோரிக்கையை முன்வைத்திருந்தோம்.

ஆனால், இப்போது வரை கூடுதல் இடங்கள் பற்றி தகவல் கிடைக்கப்பெறவில்லை. இதனால் திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கட்சியினர் தெரிவித்துள்ளனர்" எனத் தெரிவித்திருந்தார்.
இதனால் திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறுகிறதா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள தவாக சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் வேல்முருகன்.திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் இந்த தேர்தலில் 2 தொகுதிகள் எதிர்பார்த்தார். ஆனால் ஒரு தொகுதிதான் வழங்க முடியும் என்று திமுக பேச்சுவார்த்தை குழு அறிவித்தது.
இதன் காரணமாக வேல்முருகன் அதிருப்தி அடைந்தார். கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார். இந்த கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிடுவது என முடிவு எடுக்கப்பட்டது. இதனால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்து போட்டியிட முடிவு எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications